Sunday, October 30, 2011

ருக்மிணியின் விருப்பம்

"நாக்கு வரண்டு போறது.கொஞ்சம் ஜில்லுன்னு தீர்த்தம் கொடு,ருக்மணி " என்றாள் பங்கஜம் பாட்டி.

"அதெல்லாம் முடியாது.டாக்டர் அரை பாட்டலுக்கு மேலே தண்ணி கொடுக்க கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிவிட்டார்"என்றாள்

"ஒரு சொட்டு வாயில விடேன். தொண்டை ஒரே எரியறது" என்று கெஞ்சினாள் கிழவி.

"ஏற்கனவே கால் ரெண்டும் அப்பம் மாதிரி வீங்கி இருக்கு.அப்புறம் மூச்சு விட முடியாம கஷ்டபட்டா யாரு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போறது?அவர் பாட்டுக்கு ஆபீசே கதின்னு கிடக்கிறார்.இன்னும் அரை மணிலே சாப்பிடச்சே குடிச்சா போறும்" என்றாள் ருக்மிணி. பாவம் கிழவி,தலையை திருப்பிண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.

பங்கஜத்துக்கு ஐந்து பிள்ளைகள்,மூன்று பெண்கள். மற்ற எல்லோரும் கையை கழுவி ரெண்டாம் பிள்ளை கோதண்டத்திடம் விட்டு விட்டார்கள்.ருக்மிணி கொஞ்சம் வெடுக்குனு பேசுவாள். ஆனால் மனது இளகியது.குறை ஒன்றும் இல்லாமல் பார்த்து கொள்வாள்.பாக்கி ஒர்ப்பிடிகள் மாமியாரை கிட்டநெருங்கவிடாதுகள்.ஏதோ காரணம், இடம் போறாது,,குழந்தைகள் படிக்கிறார்கள்
,தன்னோட அம்மா அப்பாக்கு வேற இடமில்லை,பணக்கஷ்டம்,வெளிஊரு என்று ஆயிரம் சால்ஜாப்புகள்.இருந்தாலும் இங்க எப்போவாவது வெறும் கையோடு வரும்பொழுது மாமியார் காதில் விழும்படியாக "ருக்மிணி, அம்மா கேட்டதை பண்ணி கொடு,ரொம்ப வயசாச்சு அவ்வளவு கண்டிப்பா இருக்க வேண்டாம் ' என்று மேம்போக்காக பேசிவிட்டு செல்வார்கள்.ருக்மிணி கண்டு கொள்ள மாட்டாள்.பாவம்,அவளுக்கு குழந்தை இல்லை.வசதியாக இருந்தாள்.நிறைய ச்நேகிதிகள்.ஏழைகளுக்கு உதவி செய்ய போய் விடுவாள்.

பங்கஜத்துக்கு கண்ணு அவ்வளவா தெரியலை.டிவி பார்க்க மாட்டாள்.புஸ்தகம் படிக்க முடியாது.மனப்பாடமான ஸ்லோகங்களை வாய் முணுமுணுத்து கொண்டிருக்கும்.முகுந்த மாலை,சுதர்ஷனாஷ்டகம்,ரகுவீர கத்யம் மட்டும் சொல்ல தெரியாது. ருக்மிணி எப்போவாவது பங்கஜம் கேட்டால் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு படிப்பாள்.விஷ்ணு சஹஸ்ரநாமம் மாத்திரம் டேப் ரெகார்டர் ல போடுவாள். பங்கஜத்துக்கு பேச்சு துணை யாரும் இல்லை.நாள் முழுவதும் தனிமை தான்.பங்கஜத்தின் தம்பி பேரன் ராமானுஜம் மாதம் ஒரு தடவை அத்தை பாட்டியை பார்க்க வருவான்.அவன் ஒரு வக்கீல்.ஏதோ இருவரும் கச முசவென்று பேசி கொண்டிருப்பார்கள்.ருக்மிணி அருகில் போவதில்லை.

பங்கஜத்துக்கு ஒரு வாரமாக ஒரே அசதி.படுக்கையில் நாராக துவண்டு கிடந்தாள்.உட்கார கூட ஸ்ரம பட்டாள்.ஒரு நாள் காலை 11மணி இருக்கும்.ருக்மிணி மாமியார் அருகில் ஸ்லோகங்களை படித்து கொண்டு இருந்தாள்.திடீரென்று தலை சாய்ந்து விட்டது.பதறி போய் டாக்டரை கூப்பிட்டதில்"பாட்டி இறந்து முப்பது நிமிஷம் ஆச்சு"என்று சொல்லி கிளம்பிவிட்டார்.ருக்மிணிக்கு கை கால் ஓடலை.கண்களிலிருந்து பொலபொல வென்று தண்ணி கொட்டியது.சொல்லவொணா துக்கம் அடைத்தது.முதலில் கோதண்டம் பின்னர் எல்லா அண்ணன் தம்பிகள் அவர்கள் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாச்சு.

கார்யம் எல்லாம் முடிந்து இரெண்டாம் நாள் குடவாசல் வாத்யார் என்ன என்ன பண்ணனும் நு சொல்லி கொண்டிருந்தார். "கார்யம் எல்லாம் நன்னா ஸ்ரத்தையா தான தர்மத்தோடு விமரிசையா பண்ணனும்'என்றாள் மூத்த மருமகள்.இன்னும் இருவர் தலையை ஆட்டினர்.பிள்ளைகளும் ஆமோதித்தனர்.ஒருத்தி சொன்னாள்'மாமியார் இஷ்டப்படி தண்ணி குடிக்க கூட முடியாம கஷ்ட பட்டார்.நல்ல வெள்ளி சொம்பா தானம் பண்ணனும்."இன்னொருத்தி மாட்டு விக்ரகம் எல்லாம் கூடாது.நிஜ பசு மாட்டையேகொடுக்கணும்"என்றாள்.இப்படி ஒவ்வொருத்தர்ஒன்னொன்னுசொல்லிகொண்டிருந்தார்கள். மூத்த பிள்ளை "சேவா காலம் நிறைய பாசுரங்களை சேவித்து அரையும் குறையும் இல்லாமல் முழுமையா பண்ணனும்.சுபத்துக்கு நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவா 'என்றார்.

வாத்யார் மௌனமாக எல்லோரையும் கேட்டுவிட்டு சொன்னார்.'நீங்கள் எல்லாம் ஸ்ரத்தையாக பண்றேள்.ரொம்ப சந்தோஷம்.பாட்டி ஆத்மாக்கு நல்லது.தானம் தான் அவங்களை கரை சேர்க்கும்.உங்கள் இஷ்ட படியே பண்ணலாம்.குறைந்தது மூன்று லக்ஷம் ஆகும்'"

ஒரே நிசப்தம்.ஒருவர் ஒருவர் முகங்களை பார்த்து கொண்டனர்.கடைசி மாட்டு பெண் சொன்னாள்" ஆகட்டுமே பரவாயில்லை.எல்லோரும் தான் இருக்கோமே."

"அது எப்படி?மாதா மாதம் மாமியாருக்கு பென்ஷன் வரதே.செலவு ஒன்னும் இல்லையே.எல்லாம் சேர்ந்து இருக்குமே" என்றாள் மூத்த மருமகள்.

அப்பொழுது பங்கஜத்தின் தம்பி பேரன் வக்கீல் ராமானுஜம் சொன்னான் "அத்தை பாட்டி என்னிடம் எல்லாம் சொல்லி இருக்கா.அதை விவரமா பதிமூணாம் நாளுக்கு பிறகு சொல்றேன்.காரியத்துக்கு வேணுங்கிற பணம் நிறைய இருக்கு. கவலை வேண்டாம்.ஒன்னையும் குறைக்க தேவை இல்லை."

குடவாசல் வாத்யார் "எல்லாம் ஏற்பாடு பண்ணிடறேன்.நன்றாக குறை இல்லாமல் இந்த ஆத்துலேயே பண்ணிடலாம். கார்ட் இன்னும் ஒரு நாளில் கொடுக்கறேன்.அப்போ நான் உத்திரவு வாங்கிக்கறேன்"என்றார்.

காரியம் எல்லாம் சாஸ்த்ரோக்தமாக முடிந்தது.வாத்யார் தாராளமாக தக்ஷிணை,குடை விசிறி வேஷ்டி டவல் என்று எல்லோருக்கும் கொடுத்தார்.கோவிலில் இருந்து மாலை,பரிவட்டம் வந்தது சுபஸ்வீகாரம் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. . எல்லோருக்கும் ஒரு திருப்தி.

அன்று மாலை நாலு மணிக்கு ராமானுஜம் எல்லோரையும் ஹாலுக்கு வரச்சொன்னான்."நான் வக்கீல்னு உங்களுக்கு தெரியும்.அத்தை பாட்டி முறைப்படி என்ன பண்ணனும் என்பதை பற்றி எழுதி கொடுத்து விட்டு போயிருக்கா.தன்னுடைய பெண்கள் பிள்ளைகள் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள்.தன் பணத்தை பிரித்தால் ஆளாளுக்கு குறைவாகத்தான் கிடைக்கும்.ஆகையால் பாங்கு,டிபாசிட்கள் இருக்கிற பணத்தில் தன்னுடைய காரியத்துக்கு போனதை தவிர மீந்ததை பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கும்,அதை ஓட்டினா போல் உள்ள பள்ளிக்கூடத்துக்கும் சரி பாதியாக பிரித்து கொடுத்து விட சொன்னாள். தன்னுடைய நகைகளை ருக்மிணிக்கு சேர வேண்டியது என்று கூறி இருக்கிறா பாட்டி" என்று சொன்னான்.

சில நிமிஷங்கள் யாரும் பேசவில்லை.திடீரென்று அந்த நிசப்தத்தை மூத்த மருமகள் கலைத்தாள்."மாமியார் சொத்து,மாமியார் நகை,யாரும் அதுக்கு ஆசை படவில்லை.என்ன வேண்டுமானாலும் பண்ணி கொள்ளட்டுமே.பெருமாள் புண்ணியத்துலே நாங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறோம்"என்றாள்.கடைசி மருமகள் “மாமியார் சரியாகத்தானே பண்ணி இருக்கிறார்.அவர் நியாயம் தெரிந்தவர்.ருக்மிணி ஓர்பிடி தானே நன்றாக கவனித்து கொண்டார்.எல்லாமே அவருக்கே கொடுத்து இருக்கலாம்.மாமியார் பண்ணினது எனக்கு பரம திருப்தி"என்றாள்.மற்ற மருமகள்கள் தலையை அசைத்தனர்.பெண்கள் ஒன்றும் சொல்லவில்லை.

அப்போது ருக்மிணி கோதண்டத்தை பார்த்து "எனக்கே நிறைய நகை இருக்கு.குழந்தை குட்டி இல்லை.அம்மா நகைகளை பெண்களுக்கே கொடுத்து விடலாம்.என்ன சொல்றேள்?" என்று சொன்னாள்.

கோதண்டமும் "எனக்கும் அதுதான் சரியாக படுகிறது"என்றார்.

மூன்று பெண்களும் ஒரு சேர "ருக்மிணி மன்னிக்குதான் சேரணும்.அதுதான் எங்கள் விருப்பமும் என்றார்கள்.ருக்மிணி சிரித்தவாரே"என்னோட விருப்பத்தையும் நீங்கள் கேட்டாகணும். என்னுடைய நகைகளையே ஏழை பெண்கள் கல்யாணத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டு இருக்கிறேன்.அம்மா நகைகள் பெண்களுக்கு சேருவதுதான் நியாயம்.மறுக்க வேண்டாம் தயவு செய்து நீங்களே எடுத்து கொள்ளுங்கள் "என்றாள். .

ராமானுஜத்திற்கு அத்தை பாட்டி போட்டோவிலிருந்து லேசாக சிரித்த மாதிரி தோணித்து.

Wednesday, October 12, 2011

எழுத்தரின் சின்ன தப்பு

சின்ன கல்யாண மண்டபம்.வாசலில் தோரணம் ,கலர் விளக்கு,பெரிய கோலம்.ஜே ஜேன்னு கூட்டம்.உள்ளேயிருந்து மெல்லிசா மேள சப்தம் வந்து கொண்டிருக்கிறது.உள்ளே பழனிச்சாமியின் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம். எல்லோரும் வந்துவிட்டனர்.புரோகிதர் 7 மணி அளவில் ஆரம்பிக்க ஏற்பாடு.
பழனி சாமியின் பெண் அமிர்தா அலங்காரத்தோடு பளிச்சென்று நண்பிகள் கூட சிரிப்புடன் பேசிகொண்டிருந்தாள்.பட்டு புடவைகளில் பெண்கள் கூட்டம்.மல்லிகை வாசனை எங்கும். பழனிசாமி குறுக்கு நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.கடியாரம் 6.30-pm காட்டி கொண்டிருந்தது.முக்யமான உறவினர்கள் மேடைக்கு அருகில் இருந்தனர்.மாப்பிளை பையன் நண்பர்களுடன் சற்று தூரத்தில் காணப்பட்டான்.

திடீரென்று வாசலில் ஒரு கச முசா.என்ன ஏது என்று திரும்பி பார்க்கையில் ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் உள்ளே நுழைய எத்தனித்தனர்.எல்லோரின் தலைகளும் அங்கு திரும்பின.

"யாரையா பழனி?" என்று ஒரு போலீஸ்காரர் கூவ,பழனிச்சாமி பதட்டுத்துடன் அருகில் சென்றார்.பலர் அவரை சூழ்ந்தனர்.திடீரென்று அவர் சில்க் ஜிப்பா கலவரத்தில் தெப்பலாக நினைந்து விட்டது.

"நான்தான், பழனிச்சாமி.என்ன வேண்டும்?" என்று மென்மையாக கேட்டார்.

"இன்ஸ்பெக்டர் அய்யா உங்களை உடனே இட்டார சொல்லி உத்திரவு போட்டிருக்கார்" என்றனர். அதற்குள் மாப்பிள்ளை பையனோட தகப்பனார் அருகில் வந்து சேர்ந்தார்.

எதற்கு?நான் ஒரு புகாரும் கொடுக்கவில்லையே.போலீசுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே.ஏதோ தப்பாக இருக்கு" என்றார்.
"எங்களுக்கு அதெல்லாம் தெரியாது.உங்களை கையேடு இட்டார சொல்லி உத்திரவு. கிளம்புங்க"

என்றார்.

"இங்க பெண் நிச்ச்யதாம்புலம் ஆரம்பிக்க உள்ளது.எல்லோரும் கூடியாச்சு .முடிந்தவுடன் வந்து பார்க்கிறேன்.இந்த சமயம் நீங்க இங்க இருப்பது சரியாக படவில்லை போன் நம்பர் கொடுங்க .அவரிடம் பேசுகிறேன். இன்னும் ஒரு மணியில் நானே அங்கு வந்து விசாரிக்கறேன் "என்றார் சாந்தமாக.

மாப்பிளை பையனின் மாமா"என்ன விஷயமாகன்னு கொஞ்சம் கோடி காண்பிச்சா உபயோகமாக இருக்கும்"என்று போலீஸ்காரரிடம் கையில் பர்சோடு வினவினார்.

"எங்களுக்கு சரியாக தெரியாது.அந்த பூக்கார பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா வயத்தை சாச்சிண்டு புலம்பிக்கொண்டு இருக்கா.யாரோ பழநியாம் இந்த கதிக்கு கொண்டு வந்துவிட்டு நழுவ பார்க்கிறானாம்"

"என்னய்யா உளறுகிறே.பார்த்து பேசு.ஏதோ ஆள் மாறாட்டம்.தப்பான இடத்துக்கு வந்து அசிங்கமாக பேசிண்டு இருக்கே.இப்போவே பெரிய இடத்துக்கு பேசறேன்.நான் யாரென்று தெரியுமா" என்றார் பழனிச்சாமி மிக்க கோபத்துடன்

"நீதான் மரியாதை இல்லாம பேசரே.ஏதோ பெரிய இடத்து மனுஷனாச்சேன்னு மரியாதை கொடுத்தா எகிறுகிறாயா? வா கையோடு"என்று கையை பிடித்தார் போலீஸ்காரர்.

மண்டபத்தில் ஒரே கசமுசா.பழனிச்சாமியின் மனைவி வாயை பொத்தி அழ ஆரம்பித்து விட்டாள்.உறவினர்கள் முகங்களில் ஈயாடவில்லை. மேள சப்தம் நின்று விட்டது. பையனை சேர்ந்தவர்கள் வாயில் முகப்பில் கூடிவிட்டனர்.

அதே சமயம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் எழுத்தரை கடுமையாக சாடி கொண்டு இருந்தார்."எவ்வளவு வருஷமாக வேலை பார்க்கிறே?மொட்டையா பழனி நு எழுதி இருக்கியே.இந்த வடபழனி ல எல்லோரும் பழனி தான்.அந்த பொம்பளையை ஆள் வயது என்ன,எப்படி இருப்பான்,விலாசம் என்ன,கருப்பா வெளுப்பான்னு என்று ஒன்னும் கேக்காம என்னய்யா எழுதி இருக்கீங்க அந்த ப்ருஹஸ்பதிங்க ரெண்டு பேரும் யாரவது தப்பான ஆளை கூட்டி வந்தா என்னோட வேலை போய்விடும் தெரியமா?முட்டாள்களோடு மாரடிக்க வேண்டிருக்கு"என்று புலம்பினார்.

"ஏம்மா வாயை மூடிண்டுருக்கே?அந்த பழனி யாரு எப்படி இருப்பான்னுசொல்லு"

உடலை நாணிக்கொண்டு சற்று சிரிப்புடன் "அம்சமா இருப்பான்.28 வயது இருக்கும்.கொஞ்சம் குள்ள பையன்.,.எங்க இருக்கான்னு சொல்ல மாட்டான்.ஆனால் அடிக்கடி வந்து போய்கொண்டு இருப்பான்.நன்னா ஆசையா இருப்பான். நிறைய பணம் கொடுப்பான்.என்னோட புருஷன் சோடை. குடிச்சுட்டு வெளில தேமேன்னு கிடக்கும்.ஒன்னும் கண்டுக்காது."

அந்த சமயம் வாசலில் ஜீப்பும் பல கார்களும் சரக் சரக்கென்று வந்து நின்றன..

சில்க் ஜிப்பால உசரமாக ஆஜானுபாகுவாக சற்று குனிந்த தலையுடன் கலவரத்துடன் பழனிச்சாமி நுழைந்தார். இன்ஸ்பெக்டர் முகத்தில் 1000 வோல்ட் ஷாக்கு.எழுந்து நின்றார்

"பெண்ணோட நிச்சய தாம்பூலம் நடக்கிற சமயம் இவங்க அங்கு வந்து அசிங்க படுத்தி விட்டாங்க.என்ன சொல்லியும் கேட்கவில்லை.என்னை எதற்கு வர சொன்னீங்க?சீக்கிரம் சொல்லுங்க.அங்க என்ன நிலவரம் என்று புரியாம குழம்பி கொண்டு இருக்கேன்"என்றார்.

அந்த பொம்பளை'இவர் இல்லை.பெரிய மனுஷனாச்சே" என்று கூறி கொண்டிருந்தாள்'

"மன்னிக்கவும்.இந்த மடையன்கள் இடம் ,பொருள் தெரியாமல் ஆள் மாராட்டம்னு புரிஞ்சுக்காமல் உங்களை அனாவசியமாக தொந்திரவு பண்ணி விட்டார்கள்.ரொம்பவும் தாழ்மையுடன் எங்களை மன்னிக்க வேண்டுகிறேன்"என்றார் இன்ஸ்பெக்டர்

மறு வார்த்தை பேசாமல் அந்த க்ஷணமே வந்தவர்களுடன் மண்டபத்திற்கு விரைந்தார்.மண்டபம் விரிச்சோடி கொண்டிருந்தது

Friday, October 7, 2011

கை ராசி

சக்ரபாணி அய்யங்காருக்கு 64வயது இருக்கும்.நெஞ்சு வலி வந்த பிறகு வீட்டோடு தான் இருக்கிறார்.வாசல் ஹாலில் உள்ள கட்டில், சாய்வு நாற்காலி தான் இவருக்கு வாசம்.அளந்து பேசுவார் கோபமே வந்து பார்த்தது இல்லை.சற்று ஒடிசலா,உயரமா, வெளுப்பா கம்பீரமாக இருப்பார்.நெற்றியில் சிகப்பில் ஒரு கீற்று .ரேடியோ, பேப்பர் இது இரண்டு தவிர வேறு பொழுது போக்கு இல்லை. பென்ஷன் வந்து கொண்டிருகிறது. பணக்கஷ்டமில்லை.

அவர் மனைவி செண்பகம் ரொம்ப சாது.சற்று குள்ளம்,தாட்டியாக இருப்பாள் ஆனால் களையான முகம்.இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள்..ரொம்ப அன்னியோன்யம்.

இந்த கதையில் ராஜி ரொம்ப முக்யமான பாத்திரம்.காலையில் கீரை விற்பாள். மாலையில் பழங்கள் கொண்டு வருவாள். செண்பகம் தினம் கீரையும்,சாத்துக்குடி பழமும் வாங்குவாள். கிட்டத்தட்ட மூன்று வருஷமாக விடாமல் ராஜி கொடுத்துக்கொண்டு இருக்கிறாள்..அவளுக்கு 40 வயது இருக்கும். நல்ல உடல் வாகு.வசீகரமான சிரிப்புடன் மிகவும் அழகாக இருப்பாள்.அவள் புருஷன் போறாது .எப்பொழுதும் குடி.வேலைக்கும் ஒழுங்கா போவது இல்லை.மூன்று குழந்தைகள் வேறு.ராஜி சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடுகிறது. மாமியிடம் அடிக்கடி தன அங்கலாய்ப்பை எல்லாம் சொல்லுவாள்.மாமியும் கவனமாக காது கொடுப்பாள்.ரொம்ப கஷ்ட படும்போழுது நூறோ இருநூறோ கொடுப்பாள்.அய்யங்காருக்கு மனைவி ராஜிக்கு உதவியாக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

சரி,கதையின் முக்யமான சமாசாரத்துக்கு வருவோம்.

காலையில் 6மணிகெல்லாம் வாசலில் ராஜியின் குரல் கேட்கும்."முளை கீரை,சிறு கீரை,பொன்னாங்கனி கீரை,மெந்திய கீரை....".பச்சை பசேலென்று பார்க்கவே வாங்கும் போல தோன்றும்.மாமி தான் கூடையை இறக்க உதவி பண்ணுவாள்.

ஆனால் ராஜி "கீரையை தொடாதே.அய்யாவை கூப்பிடு.அவர் தொடட்டும்'என்பாள்.மாமி மூஞ்சி வாடிவிடும்.

சில நாட்கள் மாமி சொல்லுவாள்"அவர் குளித்துக்கொண்டு இருக்கார்.நான் எடுத்தா என்ன?உன்னோட பெரிய கீரை தேஞ்சா போய்விடும். என்னமோ அய்யா அய்யான்னு சொல்லிண்டு இருக்கே" என்பாள் மாமி சலிப்புடன்.

“உன்னோட கை பட்டா விற்று போகாது. அய்யா கை ராசியான கை.அவர் தொட்டால் ஒரு மணி நேரத்தில் எல்லாம் விற்றுடுவேன்.தப்பா எடுத்துக்காதே.நீ தொடாதே.அந்த மவராசன் வரும் வரை காத்து கொண்டு இருக்கேன்" என்பாள்.

ஒருமையில்தான் பேசுவாள்.மாமி முகத்தை சுளிச்சுகொண்டு அய்யங்காரிடம் சற்று ஏகத்தாளமாக "உங்க ராஜி வந்து இருக்காள்.நீங்க தொட்டாதான் விற்று போகுமாம்.உங்க கை ராசியாம்.என்ன ராசியோ தெரியலை. நானும் உங்களோடு நாற்பது வருஷமாக குடுத்தனம் பண்ணுகிறேன்" என்பாள்.

மாமியின் பேச்சில் உள்ள நக்கல் புரிந்தாலும் சற்று பெருமிதத்துடன் சிரித்தபடி வாசலுக்கு வருவார்."ராஜி,பிறர் மனம் நோகும்படியாக பேசக்கூடாது"என்று சொல்லி இரண்டு கீரை கட்டை எடுத்துகொள்வார்.

"தப்பா பேசலைஅய்யா.நீ தொட்டா நேரத்தோட வீட்டுக்கு போவேன் அய்யா.அதுதான். அம்மாவபற்றி எனக்கு தெரியாதா என்ன?" என்று சமாதான படுத்துவாள்.

இரண்டு நாள் கீரைக்காரி வராவிட்டால் மாமி "என்ன,உங்கள் ராஜி இரண்டு நாளாக காணலை"என்பாள்.மாமியின் மனதில் என்னவோ ஏதோ என்று ஒரு கவலை.அவரும்"நானும்தான் உன்னிடம் கேட்கனும்னு இருந்தேன் "என்பார்.அந்த ராஜி அந்த அளவு முதியவர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள்.

ஒரு நாள் மாலை 7மணி அளவில் "செண்பகம்,மாரை வலிக்கறது.மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது..டாக்டரை வரச்சொல்லேன் உடனே"என்றார்.மாமிக்கு கை கால் ஓடவில்லை. அப்படியே வாசலுக்கு ஓடி எதிர்த்த வீட்டு பையனை'ரங்கா,ரங்கா உடனே டாக்டரை கூப்பிடு.மாமாக்கு மூச்சு விடமுடியலை."என்று கத்தினாள்.உடனேயே டாக்டர்,மற்ற அக்கம் பக்கத்து மனிதர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் ஒன்னும் பண்ண முடியவில்லை.உடனேயே உயிர் பிரிந்து விட்டது.
மறு நாள் ராஜி அவர் உடலை பார்த்து தன்னுடைய சொந்த அப்பா இறந்த மாதிரி தாங்க முடியாத துக்கத்துடன் அழுதாள்.

இரண்டு மாதங்கள் ராஜி மாமியின் கண்ணுலயே படவில்லை.மாமிக்கு அவளை பற்றிய கவலையும் சேர்ந்து வாட்டியது.ஒரு நாள் ராஜியின் தங்கையை வாசலில் பார்த்தாள். கூப்பிட்டு விசாரித்ததில் அவள் தங்கை சொன்னாள்."அய்யா இறந்த பிறகு அவள் கீரை விற்பதை நிறுத்தி விட்டாள்.கேட்டால் அந்த மவராசனுடன் அந்த வியாபாரம் நிந்ததுதானாம்.பிரமை பிடிச்ச மாதிரி இருந்த அவள் இப்பொழுது தான் அவள் குடிசை வாசலில் இட்டிலி சுட்டு ஏதோ இருக்கிறாள்"என்றாள்

:என்னே இத்தனை பாசம் அவரிடம் என்று மாமி திக்கித்து போனாள்.சுதாரித்துக்கொண்டு . "அவளை வந்து என்னை பார்க்க சொல்லு" என்றாள் மாமி.

ஒரு வாரம் கழித்து வந்தாள்.முகம் வாடி இருந்தது.மாமியை பார்த்தவுடன் அழுதாள்.பிறகு மாமி சொன்னாள்."எப்பொழுதும் போல ஒரு நடை வந்து விட்டு போ.உன்னோட இட்டிலி வியாபாரம் முடிஞ்ச பிறகு வந்தால் போதும்.மாதம் 2000 ரூபாய் தரேன்.அவர் உன்னோட பேரில் 50000 ரூபாய் எழுதி வெச்சு இருக்கார்..உன்னை தன்னோட பெண் மாதிரி நடத்து நு சொல்லிவிட்டு போயிருக்கார்"என்றாள் மாமி.

ராஜி குலுங்க குலுங்க அழுதுக்கொண்டே இருந்தாள்.


Sunday, August 7, 2011

சேச்சுவின் கவலை

"புடவை ரொம்ப கந்தலா இருக்கு.வீட்டை விட்டு வெளில போகவே வெக்கம் பிடுங்கி திங்கறது" மெள்ள முனகினாள் அலமேலு.
"தெரியும்டி,கொஞ்சம் பொறுத்துக்கோ.கைவசம் 300 ரூபாய் தான் இருக்கு. கோவில்ல தாயாருக்கு புடவை ஒரே கிழிசல்.எப்படி அலங்காரம் பண்ணினாகூட கிழிசல் வெளில தெரியறது.எல்லோரும் பார்க்கறா.என்னோட உடம்பு கூனி குறுகி போறது.வாயை விட்டும் கேட்டாச்சு. ஆனாலும் உதவி பண்ண யோஜிக்கரா" என்று கோவில் அர்ச்சகர் சேச்சு புலம்பினார்.
"கவலை படாதீங்கோ.நான் வெளியில் போறதை குறைச்சுண்டுட்டேன்.எப்போ முடிகிறதோ அப்போ வாங்கி கொடுங்கோ" என்றாள்.
:இன்னும் மூன்று நாட்களில் பெருமாள் திருநக்ஷத்திரம் வரது.அதற்குள் வஸ்திரம் ஏற்பாடு பண்ணனும்.கோவில் தர்மகர்த்தாவை கேட்டேன்.கோவிலுக்கு வருமானமே இல்லை.நித்யபடி பூஜைக்கே என்னோட கையை விட்டு செலவழிக்கிறேன். கோவிலுக்கு வரவாளை கேளுங்கோ" நு சொல்கிறார்.
"ஒரு காரியம் பண்ணுங்கோ. தேஞ்சி போன என்னோட ஒரு ஜோடி வளையலை வெச்சு பெருமாளுக்கும் தாயாருக்கும் சேர்த்து வாங்கிடுங்கோ.வளையல் இல்லாவிட்டால் ஒன்னும் குறைஞ்சி போய்விட மாட்டேன்" என்றாள் அலமேலு.
சேச்சுக்கு தூக்கி வாரி போட்டது."உனக்கு ஒரு குந்துமணி கூடஇதுவரை வாங்கி தந்தது இல்லை.வேண்டாம்.பெருமாள் விட்ட வழி நடக்கட்டும்" என்றார்.
"அப்படி சொல்லாதீங்கோ.நான் முடிவு பண்ணியாச்சு.தயவு பண்ணி முதல் காரியமாக ஜவுளி வாங்க ஏற்பாடு பண்ணுங்கோ"என்று கை வளையல்களை கொடுத்தாள்.
சேட்டு கடையில் "வாங்க சாமி, ஏது அபூர்வமாக இங்கே வந்தீங்க?நான் என்ன உதவி பண்ணட்டும்"என்று கேட்டார்.
"ஒன்னும் இல்லையப்பா.கொஞ்சம் அவசர பணமுடை.இந்த ஜோடி வளையல்களுக்கு என்ன முடியுமோ அவ்வளவு தந்தீங்கன்னா ரொம்ப நல்லதாக இருக்கும்'என்றார்.
தேச்சுi பார்த்து விட்டு"இது ரொம்ப கலப்படம்.வளையல்களும் ரொம்பவும் தேஞ்சி போய்விட்டது. ஜாஸ்தி வராதே"என்றார்.
சேச்சுவின் முகம் வாடியது கண்டு "என்ன பணமுடை, சாமி?யாருக்காவது உடல் நலம் சரியில்லையா?சொல்லுங்க எவ்வளவு வேணும் ?"என்றார் கரிசனத்துடன்.
"அதெல்லாம் இல்லை.பகவான் புண்ணியத்துல எல்லோரும் நன்றாக இருக்கோம்.பெருமாளுக்கும் தாயாருக்கும் வஸ்திரம் கிழிந்து மாற்ற வேறு புடவை வேஷ்டி இல்லை.கோவிலுக்கும் பணமுடை.வருமானம் இல்லை.தர்ம கர்த்தா கை பணத்தை போட்டு நடத்தி கொண்டு இருக்கிறார்.பெருமாள் நக்ஷத்திரம் வரது அதற்குள் இந்த வளையல்களை போட்டு வாங்கலாமேன்னு யோசனை.அதுவும் முடியாது போல இருக்கு.கேட்பதை வாரி வழங்கும் வள்ளலுக்கே வஸ்திரம் இல்லையானால் மனது ரொம்ப வியாகூல படுகிறது.என்ன சோதனையோ தெரியலை"என்றார் சேச்சு.
"என்றைக்கு அந்த நல்ல நாள்?"சேட்டு கேட்டார்.
"இரண்டு நாள் கழித்து புதன் கிழமை அன்று"என்றார் சேச்சு.
"கவலையை விடுங்க.யாராவது கட்டாயமாக வந்து உதவி பண்ணுவாங்க.வளையல்களை கையில பிடியுங்க.ஆண்டவன் மேல நம்பிக்கை வையுங்க.அப்படி யாரும் வரலைனா என்னை வந்து பாருங்க."என்றார் சேட்டு
செவ்வாய் மாலையில் கோவிலில் தாயாருக்கு அர்ச்சனை பண்ணிக்கொண்டு இருந்தார்.மனதில் சொல்லவொணா வருத்தம்.கண்களில் ஒரு சோகம்.அப்பொழுது ஒருவர் வந்து ஒரு பெரிய கூடையை அர்ச்சகர் முன் வைத்தார்.
சேச்சு உடனே அர்ச்சனையை முடித்து,"என்ன இது?யார் கொடுத்தார்கள்?"என்று விசாரித்தார்

"எனக்கு தெரியாது.யாரோ ஒருவர் கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் சேர்ப்பித்து விடு என்று சொல்லி காரில் வேகமாக சென்று விட்டார்" என்று அவர் சொன்னார்.
கூடையின் மேல் உள்ள துண்டை அகற்றி பார்த்தப்பொழுது உள்ளே இரண்டு பெரிய பொட்டலங்கள்.திறந்து பார்த்ததில் ஒன்றில் ஒரு ஜோடி பட்டு புடைவைகள் ரவிக்கை துண்டுகளுடன்,பெரிய மயில் கழுத்து கரையில் ரெண்டு ஜோடி வேஷ்டிகள். ஒரு பொட்டலத்தின் மேல் பெருமாளுக்கு என்றும் மற்றொன்றில் அர்ச்சகர் தம்பதிகளுக்கு என்றும் எழுதி இருந்தது.அதில் ரெண்டு ஜோடி புடவை வேஷ்டி ரவிக்கை துணிகளுடன்.இரண்டு பொட்டலங்களிலும் ஆயிரம் ரூபாய் நோட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஒரு சின்ன குறிப்பும் இருந்தது.
"அன்றைய பூஜை என்னோட உபயமாக இருக்கட்டும்.ஜமாய்ச்சுடலாம் விமரிசையாக.நாளைக்கு கோவிலில் புஷ்பம்,தேங்காய்,பழங்களுடன் நேரில் உங்களை வந்து பார்க்கிறேன்.
ஒரு பக்தன்"
சேச்சுவிற்கு கை கால் ஓடலை.தாயாரை திரும்பி பார்க்கிறார்.சின்ன புன்முறுவலுடன் இருக்கிறதாக ஒரு பிரமை. உடனேயே யானை பலம் வந்து விட்டது.நாளைய உற்சவம் பற்றிய கவலை எல்லாம் மறைந்தது.மனதில் ஒரு வேளை சேட்டுவின் உபயமோ என்று ஒரு குறுகுறுப்பு.
புதன் காலையில் கோவில் திறந்த உடனேயே காரில் சேட்டு இறங்கி வந்தார்.கையில் எல்லா பூஜா திரவியங்குளுடன்.
சிரித்தபடியே "சாமி திருப்திதானே.நல்லபடியாக நடக்கட்டும் இன்றைய உற்சவம்.இனிமேல் இது என்னுடைய கைங்கரியமாக இருக்கட்டும்."என்றார்.
கோவில் மணி டாண் டாண் என்று ஒலித்தது.
சேச்சுவின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.


.

Tuesday, July 5, 2011

அந்திம நேரம்

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் அந்திம காலம் உண்டு.அதை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதில் தான் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசம் உண்டு.எதையும் பிரிகின்ற நேரம் மனதிற்கு வருத்தம் அளிப்பவைதான்.ஆடு மாடு,வீடு வாசல், சொந்தம் பந்தம் எல்லாமே கோந்து மாதிரி கெட்டியாக பிடித்துகொள்ளும் சமாச்சாரங்கள்.

வாழ்க்கையில் உழல உழல அவைகளின் ஆசாபாசங்கள் நம்மை பற்றிக்கொண்டு எளிதில் துறக்க அதில் திளைத்து இருக்கும் மனம் கொடாது.
இருப்பினும் முதுமை வந்துவிட்டபின் பார்த்தது,உண்டது,களித்தது,அனுபவித்தது போதும் என்கிற மனப்பக்குவம் வராத நிலையில் பிரியப்போகிற சோகம்தான் மிஞ்சி நிற்கும்.அந்த சமயம் நாம் பண்ணின கெட்ட செயல்கள்தான் பூதாகாரமாய் நம் மனம் முன் நிற்கும்.நல்ல செயல்கள் ஏதும் பண்ணியிருந்தால் கூட மனதில் எளிதில் வராது.பயம்,அச்சம்,இருட்டு, போகுமிடம் தெரியாத ஒரு குழப்பம் எல்லாம் ஒரு சேர ஒரு கிலி.மிரள மிரள விழித்துக்கொண்டு,நாக்கு குழற, வாய் கோண மரணத்தை எதிர்கொண்டு பரிதவிப்பின் போது கூட வாய் தப்பி தவறி கூட ஆண்டவனை நினைக்காது.சரோஜா எங்கே,நந்து எங்கே,யச்சுமி எங்கே,நாய் எங்கே,பூனை எங்கே என்று மனைவி மக்களைத்தான் மனம் நாடி தேடி செல்லும்.

ஆனால் அந்த சுற்றமும் சூழமும் உயிர் உள்ள வரை தான்.அப்புறம் நடப்பதே வேறு சமாசாரம் தான்.பட்டினத்தார் அழகாக சொல்லியிருக்கிறார் இந்த பாடலில்


ஊரைக் கூட்டி உரக்க அழுதிட்டு
பேரை மாற்றி பிணமென்று பெயரிட்டு
சூரையம் காட்டிடை கொண்டுபோய்
வைத்திட்டு
நீருல் மூழ்கி நினைவொழிந்தனரே


அதனால் தான் சிவயோகி சித்தானந்தர் அந்த நேரம் வரை காத்திராதே இன்றே இப்போதே ஆண்டவனை நினைவில் கொள் என்று நமக்கு வலியுறுத்துகிறார் இந்த பாடல்களில்.


நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என்
நெஞ்சை அடைத்திடும் போது-விக்கி
நாவும் குழறியபோது-மனம்
எண்ணிடுமோ தெரியாது-நான்
அன்றுனைக்கூவிட இன்றழைத்தேன் எனை
ஆண்டருள்வாய் ஹரிநாராயணா


உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும்
ஓவென்று நின்றழும்போது -உயிர்
ஓசைகள் ஓய்ந்திடும் போது -மனம்
எண்ணிடுமோ தெரியாது-இன்று
பற்றி உனைப் பணிந்தே அழித்தேன் ஆபத்
பாந்தவனே ஹரிநாராயணா


என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி
இல்லை என்றாகிடும் போது -மனம்
எண்ணிடுமோ தெரியாது-நீ
அன்றுவரும் பொருட்டின்றழைத்தேன் அருள்
அச்சுதனே ஹரிநாராயணா

Monday, June 20, 2011

கல்யாணத்தில் சிறிய கலாட்டா

முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்தது.ஒரே கூட்டம், சந்தனமும் மல்லிகையும் ஹோமப்புகையும் சேர்ந்து கல்யாண மண்டபத்துக்கே உரித்தான மணம் .மேடையில் கல்யாண பெண்ணும் மாப்பிள்ளையும் புரோகிதர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த சமயம் வாயிலில் ஒரு வாலிபன் 'பெண்ணின் அப்பாவை சற்று அவசரமாக பார்க்கவேண்டும்" என்று கேட்டுகொண்டிருந்தான். யாரோ என்னவோ என்று அவரும் அலறி புடைத்து கொண்டு மேடையிலிருந்து ஓடிவந்தார்.

"யாரு நீங்க?தெரியலையே.என்ன விஷயம் வேகமாக சொல்லுங்க"என்றார்.

"சற்று தள்ளி போய் தனியா பேசலாமா?"என்றான்.

"ஒண்ணுமில்லை ஒரு சின்ன விஷயம் உங்க காதில முதல்ல போடலாமேன்றுதான் உங்களை அழைத்தேன்.உங்களை ச்ரமப்படுத்தினதற்கு மன்னிக்கவும். காலேஜ்லேந்து லதா என்னோட காதலி.ரொம்ப நாள் நெருக்கமான பழக்கம்.அப்பா அம்மா நம்மோட காதலுக்கு ஒப்புக்கொள்ளமாட்டாங்க. இந்த கல்யாணம் நடக்க விடுங்க என்று ரொம்ப கெஞ்சினாள். நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.ஆனால் மனம் கேட்க மாட்டேங்கறது.ஒரே ஏமாற்றமாக இருக்கு.அப்புறம் ஏதாவது தொழில் ஆரம்பிக்க உதவி பண்ணுவதாக சொன்னாள்.கல்யாணத்துக்கு அப்புறம் அவளை சந்திக்க விருப்பமில்லை.அதுதான் உங்க கிட்ட வந்தேன்."என்றான்.

"எனக்கு ஒண்ணும் புரியலை.அவள் மேடையில் இருக்கா.அப்புறம் கேட்டு சொல்றேன்.எனக்கு வேலை நிறைய இருக்கு."என்றார் அப்பா.

"உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் லதாவையே பார்த்து பேசறேன்.ஆனால் ஏதாவது ஏடாகூடமாகி விடப்போறதுன்னு யோசனை. "என்றான்

"வேண்டாம் வேண்டாம்,உங்களுக்கு என்ன உதவி தேவை? சொல்லுங்க.நல்ல வேலை பார்த்து தரேன்."என்றார்

"வேலை வேண்டாம்.சொந்த தொழில் பண்ண ஆவல்.முதலீடு செய்ய பணம் தேவை"என்று இழுத்தான்.

கொஞ்சம் ரூமிற்கு வாங்க.அங்கே பேசலாம்"என்று அழைத்து சென்றார்.

"காபி சாப்பிடுங்க.ஒரு நிமிஷத்தில வந்துடறேன்"என்று போனார்
சிறிது நேரத்தில் பெண்,மாப்பிள்ளை பையனோடு வந்தார்.

இவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை.முகத்தில் பேயடித்தது.
சுதாரித்துக்கொண்டு "நான் வேணா அப்புறம் வந்து பேசிக்கறேன்.உங்க வேலையை கவனிங்க"என்றான்.

"இல்லை,இல்லை,இப்பொழுதே பேசி தீர்த்துக்கலாம்.எதற்கு தள்ளி போடுவது? லதா, நீ என்ன சொல்றே "என்றார்.

"முதல்ல இவர் யார், என்ன வேணுமாம் அதை சொல்லுங்க, அப்பா"என்றாள்

"உன்னோட ரொம்ப பழக்கமாம்.நீ அவருக்கு பண உதவி பண்றேன்னு சொல்லிருந்தாயாம்.அதனால ஒரு லக்ஷம் கொடுங்க என்கிறார்"என்றார் அப்பா

"எனக்கு இவர் யாருன்னே தெரியாது.எங்க ஆபீஸ் பக்கம் பார்த்து இருக்கேன்.இவரிடம் இதுவரை பேசினது இல்லை"என்றாள்.
.
அந்த சமயம் ஒரு போலீஸ்காரர் வந்து மாப்பிளை பையனை சல்யூட் அடித்து கமிஷனர் வந்து கொண்டு இருக்கிறார், சார்" என்றார்.

"சரி, இன்ஸ்பெக்டரை அனுப்பு உடனே" என்றான் மாப்பிளை பையன்.

வாலிபனுக்கு உதறல்.அவனுக்கு மாப்பிள்ளை பையன் போலீஸ்ல அதிகாரின்னு தெரிஞ்சு போச்சு. "நான் வரேங்க.என்னை விடுங்க"என்றான்.

அதற்குள் இன்ஸ்பெக்டர் வர அவரிடம் "இவரை நன்னா கவனித்து அனுப்பியுங்க."

அப்பாவை பார்த்து "இன்ஸ்பெக்டரிடம் எல்லாம் சொல்லி நன்னா கவனிச்சுக்க சொல்லுங்க" என்றான்.

"சரி சார்,நம்ம ஜீப் வண்டியிலேயே அவரை எந்த இடத்துக்கு போகணுமோ அங்கே அழைத்துக்கொண்டு போகிறேன்" என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்து அவனை தள்ளாத குறையாய் தள்ளிக்கொண்டு போனார்.

லதா மனதுக்குள் சிரித்துகொண்டாள்.
.

Thursday, June 16, 2011

சிறுமியின் பெருந்தன்மை

சமீபத்தில் பெருமாள் கோவிலுக்கு போவதற்காக பல்லவன் வண்டியில் ஏறினேன்.டிக்கட்டு 3.50 ரூபாய்.கையிலோ 23 ரூபாய்தான். இருந்தது. சில்லறை இருக்கா அல்லது இல்லையா என்று பார்க்காமல் "சில்லறை இல்லை.விலையை சரியாக கொடு,இல்லாவிட்டால் கீழே இறங்கு" என்று நிர்தாக்ஷின்யமாக கண்டக்டர் சொல்லி விட்டார்.எவ்வளவு கெஞ்சியும் தயவு தாட்சிண்யம் இல்லாமல் கறாராக இருந்தார். யாரோ முன்பின் தெரியாதவர் 50 பைசா நாணயத்தை கொடுத்து என்னை கீழே இறங்கவிடாமல் தப்ப வைத்தார்.மனதில் ஒரு கனம்.முதலில் இருந்த உற்சாகம் மறைந்து விட்டது.

அன்று கோவிலில் பெருங்கூட்டம்.வாசலில் செருப்பை விட்டு உள்ளே சென்றேன்.ஒவ்வொரு முக்ய சன்னிதியாக சென்று பிரார்த்தித்து விட்டு வெளியே வந்தேன். சுமார் 9 வயது சிறுமியிடம் டோக்கனை கொடுத்தேன்.அடுத்த க்ஷணமே செருப்பை கொடுத்து ஐம்பது பைசா என்றாள்.ஜேபியில் கை விட்டேன்.அதே 20 ரூபாய் நோட்டு

."சில்லரை இல்லையே,அய்யா"என்றாள்.

"என்னிடமும் இல்லையே பெண்ணே,கொஞ்சம் பாரேன்" என்றேன்.

பக்கத்தில் உள்ள பூக்காரி தேங்காய் பழம் விற்பவர்களிடமும் கேட்டாள்.அவர்கள் கை விரித்து விட்டனர்.நானோ கைகளை பிசைந்து கொண்டு செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தேன்.

"ஐயா இன்னொரு தடவை வரும்போது கொடுங்க.பரவா இல்லை" என்றாள் சிரித்தபடியே.களையான முகம்.குடும்பத்தின் ஏழ்மை தென்பட்டது. ஆனால் என்ன பதவிசு,தாராள மனப்பான்மை இந்த சின்ன வயதிலேயே.
ஒரு வேகத்தில் "இந்தா, நீ இந்த 20 ரூபாய் முழுக்க நீயே வெச்சுக்கோ.சில்லரை தர வேண்டாம்"என்றேன்.

"எனக்கு வேண்டாம்.நாளைக்கோ இல்ல எப்போது நீங்க இங்க வரீங்களோ கொடுத்தா போரும்" என்றாள்.

மனதில் அந்த கண்டக்டரின் உதாசீனமும் ஈரமில்லாத மனப்பான்மையும் இந்த ஏழை சிறுமியின் பெருந்தன்மையும் நிழலாட ஆரம்பித்தது..நற்குணங்கள் அந்தஸ்திலோ வயதிலோ சம்பந்த பட்டது இல்லை ,இயல்பாகவே வருபவை என்று புரிந்தது. இன்னொன்றும் தெரிந்தது.ஏற்கனவேயே சில்லறை இல்லாமல் பட்ட அவதியை மனதில் கொள்ளாமல் செருப்பை விட்ட என் முட்டாள்தனமும் புரிந்தது

Friday, June 10, 2011

உங்களுக்கு புரிந்ததா?



லலிதா மாமிக்கு 50 வயது இருக்கும்.நல்ல உயரம்,களையான முகம்,கண்களில் ஒரு சிரிப்பு, நடையில் ஒரு கம்பீரம்,விசாலமான நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன் லக்ஷ்மீகரமா இருப்பாள்.
பாவம் மாமிக்கும் மாமாவிற்கும் ஈடே கிடையாது.அவர் கச்சலா சற்று குள்ளமா,தூக்கின பற்களோடு பார்க்க நன்றாக இருக்கமாட்டார்.எப்பொழுதும் முகத்தில் சிடுசிடுப்பு.சிரிப்புக்கு அவரிடம் பயம் போலும்,கிட்டவே வராது. உரக்க பேச மாட்டார் ஆனால் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருக்கும்.மாமி கண்டுக்கொள்ள மாட்டாள்.கிட்டவும் போகமாட்டாள்.எனக்கு அந்த சின்ன 14 வயதிலும் அவர்களிடம் அன்யோன்யம் குறைவு என்று உள்ளூர பட்டது.
மாமா எப்போதும் என்னிடம் அதட்டலாகவே பேசுவார்.எங்கள் வீட்டில் பின்பக்கமுள்ள இரண்டு அறைகளில் அவர்கள் குடித்தனம்..ஒரு நாள் நான் மாமியிடம் மாமா எப்பொழுதும் என்னிடம் எரிந்து விழுந்து கொண்டே இருக்கிறார் என்று சொன்னேன்.
" அவர் ஒரு முசுடு. அவரை கண்டு கொள்ளாதே.வாத்சல்யம்னா வீசை என்ன விலைன்னு கேட்பார்..அவர் இருக்கும் போது வராதே'என்றாள்.
என் தலை மயிர் சுருள் சுருளா தியாகராஜ பாகவதர் மாதிரி நீண்டு இருக்கும்.மாமிக்கு அதை கோதிவிட பிடிக்கும். மாமி அடிக்கடி தின்பதற்கு ஏதாவது கொடுத்துகொண்டே இருப்பாள்.நானும் பள்ளிக்கூடம் விட்டவுடன் 4 மணிக்கெல்லாம் மாமியுடன் தான் இருப்பேன்.
என் அம்மாக்கூட ஒரு நாள் " வயசு பதினைந்து ஆகப்போகிறது. உடம்பு தான் வளர்ந்து இருக்கே தவிர புத்தி குழந்தை மாதிரிதான் இன்னும் இருக்கு. .ஆண்பிள்ளையா விளையாடப்போகாமல் எப்போதும் மாமியோட என்ன?வெளில போய் விளையாடு"என்றாள்.இருந்தாலும் எனக்கு மாமியுடன் இருக்கத்தான் பிடிக்கும்.
மாமிக்கு ஒரே பெண்.மாமாவிற்கு ஏதோ சின்ன வேலை.சம்பளம் அதிகமில்லை.கஷ்ட ஜீவனம்.எப்படியோ தன்னிடமிருந்த நகைநட்டெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணிகொடுத்து விட்டாள்.மீந்தது கைகளில் ஒரு ஜோடி தேய்ந்து போன வளையல்கள்,கழுத்தில் ஒரு மெலிதான சங்கிலி தான். இருந்தும் பெண்ணிற்கு அப்பாவிடம் தான் பாசம் அதிகம்.மாமியுடன் எப்பொழுதும் சலிப்புடன் பேசுவாள்.வாரா வாரம் வருவாள் ஆனால் ஆசையுடன் அன்பாக ஒரு தடவை கூட பேசி பார்த்தது இல்லை.
ஒரு நாள் மாமி என் அம்மாவிடம் கண்களில் கண்ணீர் ததும்ப சொல்லி கொண்டிருந்தது என் காதில் விழுந்தது."மாமி உங்கள் பெண்கள் எல்லாம் எவ்வளவு அன்பாக 'அம்மா'அம்மா 'என்று உங்கள் காலை சுற்றி வருகிறார்கள்.எனக்கு கொடுப்பினை இல்லையே. ஒரே பெண் என்று ஆசையாக வளர்த்தேன்.கொஞ்சம் கூட பாசமில்லாமல் 'நீ கழுத்தில் போட்டுண்டு இருக்கியே அந்த சங்கிலி உனக்கு எதற்கு?என்னிடம் கொடுத்து விடு.என் மாமியார் உங்க அம்மா அப்பா பண்ணினது போறாது' என்று சண்டை போடுகிறாள்."
"கவலை படாதே,லலிதா.அந்த பெண்ணை என்ன கொடுமை படுத்தராங்களோ நமக்கு என்ன தெரியும்?ஏதோ சுவாதீனத்தில கேட்டு விட்டாள். மனதை சங்கட படுத்திக்காதே' என்றாள். என் அம்மா.எனக்கு மாமியை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.
ஒரு நாள் சீக்கிரம் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டேன்.அம்மா எங்கயோ போயிருந்தாள்.நான் மாமியுடன் பேச போய் விட்டேன்.என்னை பார்த்தவுடன் மாமிக்கு ஒரு சந்தோஷம்.பசியாக இருக்கும் சாப்பிடு என்று இரண்டு வடை கொடுத்தாள்.வழக்கம் போல என் தலையை கோதிவிட்டுக்கொண்டு இருந்தாள்.எனக்கு இதமாக இருந்தது.நானும் நெருங்கி உட்கார்ந்தேன்.
"ராஜு,நீதான் எனக்கு ஒரு ஆறுதல்.என்னோட வாழ்க்கையில் அன்போ ஆதரவோ கண்டதில்லை.உன்னை பார்த்தவுடன் கவலை எல்லாம் மறைந்து விடுகிறது."என்றாள் மாமி.
அந்த சமயம் மாமா எதிர்பாராது உள்ளே நுழைந்தார்.எங்களை பார்த்தவுடன் கண்களில் ஒரு கோபம்.வாயில் கனல் தெறித்தது.
"என்ன அசிங்கம் இது.போடா வெளியே.இங்கே மறுபடி வந்தால் என்ன ஆகும்னு சொல்ல முடியாது'என்று உரக்க கத்தினார்..
“ என்ன அபத்தமான பேச்சு.அவன் குழந்தை.உங்கள் கல்மிஷத்தை எல்லாம் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்”.
"எனக்கு எல்லாம் தெரியுமடி.நான் ஏமாளம் நு தப்பா கணக்கு போடாதே. அவன் குழந்தை இல்லையடி,கோட்டான்.இது எவ்வளவு நாளா நடக்கிறதுனும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு ."என்னை பார்த்து போடா வெளியே.வெக்கம் கெட்டவனே"என்றார்.
"அவன் மனதிலே விஷத்தை விதைக்காதீங்க.விகல்பமில்லாத குழந்தை அவன்" என்றாள் மாமி.
பளீர்னு மாமி முதுகில் ஒரு அடி விழுந்தது.அவளை உள்ளே தள்ளிக்கொண்டு கதவை சாத்தினார்.நான் வெளியே ரொம்ப நேரம் நின்றுகொண்டு மாமி விசும்பும் குரலை கேட்டு கொண்டிருந்தேன்.
மறு நாள் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பினபிறகு நேரே பின்பக்கம் மாமியின் பகுதிக்கு சென்றேன்.கதவில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது.அம்மாவிடம் ஓடி வந்து "அம்மா,மாமி வீடு பூட்டி இருக்கே,ஏன்?'என்று வினாவினேன்.
"என்ன காரணம்னு தெரியலை.மாமா வந்து'இங்கே சௌகரிய படலை வேறு வீட்டுக்கு போகிறோம் "என்று சொல்லி சாவியை கொடுத்து விட்டு போய்விட்டார். .லலிதா என்னிடம் வார்த்தைகூட சொல்லிக்காம போனாள்.எவ்வளவு வருஷ பழக்கம்,இப்படியா நிர்தாக்ஷின்யமா இருப்பா மனிதர்கள்.எங்கே போகிறோம்னு கூட சொல்லலை. எனக்கு ஒன்னும் புரியலை"என்றாள். .
எனக்கு ஏதோ லேசாக புரிந்த மாதிரி தோணித்து . மனம் கனமாக இருந்தது.


Wednesday, June 1, 2011

ஒட்டியாணம்

ஒரு நாள் விஷ்ணு பகவானுக்கு ஏதாவது வேடிக்கையா பண்ணனும் போல இருந்தது.அப்படியே மாறு வேஷம் போட்டுக்காமல் பூமியில் இறங்கி வந்தார். இரவு நேரம்.அதிகம் மனித நடமாட்டம் இல்லை. ஏட்டு மாணிக்கம் வழக்கம் போல ரோந்து வந்து கொண்டிருந்தார்.
" என்னய்யா ட்ராமாலேந்து வேஷத்தை கலைக்காமல் அப்படியே வந்து விட்டே?பார்த்தால் விஷ்ணு மாதிரியே இருக்கே" என்றார்.
"இல்லையே, நான் எப்பொழுதும் இருக்கிற மாதிரி தானே இருக்கேன்"என்றார் விஷ்ணு.
:என்ன, தண்ணி கிண்ணி போட்டுவிட்டு வந்து இருக்கியா?"
"எனக்கு தாகம் பசி எல்லாம் கிடையாது.ஒரு மாறுதலுக்காக அதிர்ஷ்டவசமாக யாரால் என்னை பார்க்க முடிகிறதோ அவர்களுக்கு தரிசனம் கொடுக்கலாம் என்று ஒரு அவா.நீ தான் முதல் ஆசாமி." என்றார் பகவான்
"பார்த்து பேசு.மாமன் மச்சான் மாதிரி நீ போட்டு பேசறியே.சும்மா ரீல் விடாதே.உள்ளே தள்ளி விடுவேன். புரிஞ்சுதா?' ஏட்டையா கோவப்பட்டார்
பகவான் மெலிதாக அவன் அறியாமையை கண்டு புன்னகைத்தார்
"என்ன சிரிக்கரே .இந்த டுபாகூர் வேலை எல்லாம் வேண்டாம். நீ போட்டுண்டு இருக்கியே பளபளன்னு அதெல்லாம் டூப்ளிகேட் தானே?எங்க அடிச்சே? உண்மையை சொல்லு"என்றார் மாணிக்கம்
"இல்லையப்பா,எல்லாம் நிஜ தங்கம்.வைரம் வைடூரியம் மாணிக்கம் எல்லாமே அப்பழுக்கு இல்லாதது.உனக்கு எது வேண்டுமோ தயக்கப்படாமல் கேள்" என்றார் இறைவன்.
ஏட்டுக்கு ஒரே குழப்பம்.ஒரு வேளை இது நிஜ தங்கமாக இருந்தால் அஞ்சலை எவ்வளவு சந்தோஷப்படுவாள்.இது வரை ஒரு குந்துமணி தங்கம் கூட வாங்கி கொடுத்தது இல்லை.ஆளை பார்த்தால் தப்பா படலையே.பின்னே பைத்தியக்காரனா இருக்குமோ.தடிதடியா போட்டுண்டு இருக்கானே கட்டாயம் பித்தளையாகத்தான் இருக்கும்.
"சும்மா அளக்காதே.இவ்வளவு தங்கம் ரொம்ப பணக்காரன்கிட்ட கூட இருக்காது.நீயோ டிராமாக்காரன்.நிஜத்தை சொல்லு.இல்லாட்டி ஸ்டேஷன் இட்டுண்டு போவேன்" என்று பயமுறுத்தினான்.
"நீ எவ்வளவு தடவை கேட்டாலும் என்னுடைய பதில் அதேதான்" என்றார்.
"அப்போ சரி,எனக்கு உன்னோட ஒட்டியாணத்தை கொடு. கல்லெல்லாம் புதைச்சு இருக்கு.என்னோட பெண்சாதிக்கு பிடிக்கும்" என்று கேட்டு வைத்தார் ஏட்டு.
"இந்தா. எடுத்துகொள்.திருப்தி தானே? ஆனால் ஜாக்கிரதை! யாராவது உன்னிடமிருந்து பிடுங்கி கொள்ளாமல் பார்த்துகொள்.இனிமேல் உன் கண்களுக்கு நான் தெரியமாட்டேன்" என்று சொல்லி மறைந்தார்.
மாணிக்கத்துக்கு ஒரே புல்லரிப்பு.தன்னுடைய அதிர்ஷ்டத்தில் ஒரே ஆச்சரியம். வீட்டுக்கு ஓடிவந்து "அடியே,உனக்கு ஒட்டியாணம் பாரு,போட்டுக்கோ ரொம்ப அழகா இருப்பே" என்று சப்தமாக சொன்னார்.
அவ்வளவு தான் தெரியும்.இடி கனமாக முதுகில் ஒரு அறை விழுந்தது." யாரைய்யா அந்த பொம்பளை?அவ இடுப்புக்கு ஒட்டியாணம் கேக்குதோ?வெக்கம் கேட்ட மனுஷனுக்கு ஒரு நகை வாங்கி போட வக்கு இல்லை.ஏதோ கேடுகெட்ட பொம்பளைக்கு ஓடடியாணமாம்.தூக்கத்தில கூட அவ எண்ணமா?கடவுளே என் வாழ்க்கை இப்படி ஆயிடுத்தே"என்று உரக்க புலம்பலானாள்.
மாணிக்கம் பரக்கப்பரக்க கண்களை துடைத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.

Thursday, May 26, 2011

பெரியவரின் மனக்கவலை

"லொக்கு,லொக்கு " இருமல் சப்தம்

"நான் இங்கேயே இருக்கேன்டா.என்னை எங்கேயும் தயவு செய்து விட்டுடாதே"

" முடியாது அப்பா.கொஞ்ச நாளைக்கு அங்கே இருங்க. அப்புறம் அழைச்சுண்டு வந்துடறேன் "

"கொஞ்ச நாள் தான்னால் எதுக்கு அனுப்பரே?எனக்கு பயமா இருக்குடா நீ அப்புறம் அங்கேயே விட்டுடுவாயோன்னு" அப்பாவின் புலம்பல்

"கொஞ்சம் புரிஞ்சுக்கோ.பசங்களுக்கு பரிக்ஷை. உனக்கு மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை.நீ எப்போ பார்த்தாலும் இருமிக்கொண்டு இருக்கே.அதுகளாலே படிக்க முடியலை."

நான் இனிமேல் இரும மாட்டேன்.லொக்கு.லொக்கு(இருமுகிறார்)....அப்படி வந்தால் வாயை துண்டால மூடிக்கறேன். என்னை அனுப்பிச்சுடாதே."

"அப்பா, உன்னோட தாளலை,சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறே. இருமல் மாத்திரம் இல்லை. வனஜாவால உன்னை கவனித்து கொள்ள முடியலை. அவளுக்கே முடியலை அவ அம்மா ஒத்தாசைக்கு வராங்க.இடம் பத்தாது. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. உடம்பு சரியாகட்டும் .நானே வந்து உன்னை திருப்பி அழைச்சுக்கறேன்”

“நான் வாசல் திண்ணையிலே இருக்கேன் . குளிக்க சாப்பிட மாத்திரம் உள்ளே வரேன் பரவாயில்லையா?”

“அப்பா வீணா புலம்பாதே. அங்க உன்னை நன்னா கவனிச்சுப்பா.எங்கயோ காட்டுல தள்ளர மாதிரி பேசாதே.கொஞ்சம் அனுசரிச்சு போ”..

“அங்க சாப்பிடவே குமட்டும். வனஜாதுதான் பிடிக்கும்”

காதுல போட்டுக்காமல் சொன்னான் "நாளைக்கு காலைல 7 மணிக்கு கிளம்பணும்.தகராறு பண்ணாதே.கவலை படாதே.உன்னை விட்டுடமாட்டேன்”

பெரியவரால இரவு முழுதும் தூங்க முடியவில்லை.ஒரே மனக்கவலை.

காலையில் வனஜாவும் அவருடைய மகனும் அவரை உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

பெரியவர் "இவ்வளவு பெரிசா இருக்கே.முதியோர் இல்லம் மாதிரி தெரியலையே" என்றார்.

"அப்பா, உங்கள i யார் முதியோர் இல்லத்தில் விடப்போவதாக சொன்னார்கள்.நீங்களே கற்பனை பண்ணிக்கொண்டால் நான் என்ன பண்ணமுடியும். இது பெரிய ஆஸ்பத்திரி.உங்களுக்கு தனி ரூம் போட்டு இருக்கேன்.ரொம்ப நாட்களாக இருமல்.டாக்டர்கள் உங்களை எல்லா பரிக்ஷையும் பண்ணி மருந்து கொடுப்பார்கள். குணமான பிறகு வீட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன். நானோ வனஜாவோ தினம் வருவோம்” என்றான் மகன்

நீ தங்கம்டா.உங்களை தப்பா எடை போட்டுவிட்டேன்