Monday, June 20, 2011

கல்யாணத்தில் சிறிய கலாட்டா

முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்தது.ஒரே கூட்டம், சந்தனமும் மல்லிகையும் ஹோமப்புகையும் சேர்ந்து கல்யாண மண்டபத்துக்கே உரித்தான மணம் .மேடையில் கல்யாண பெண்ணும் மாப்பிள்ளையும் புரோகிதர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த சமயம் வாயிலில் ஒரு வாலிபன் 'பெண்ணின் அப்பாவை சற்று அவசரமாக பார்க்கவேண்டும்" என்று கேட்டுகொண்டிருந்தான். யாரோ என்னவோ என்று அவரும் அலறி புடைத்து கொண்டு மேடையிலிருந்து ஓடிவந்தார்.

"யாரு நீங்க?தெரியலையே.என்ன விஷயம் வேகமாக சொல்லுங்க"என்றார்.

"சற்று தள்ளி போய் தனியா பேசலாமா?"என்றான்.

"ஒண்ணுமில்லை ஒரு சின்ன விஷயம் உங்க காதில முதல்ல போடலாமேன்றுதான் உங்களை அழைத்தேன்.உங்களை ச்ரமப்படுத்தினதற்கு மன்னிக்கவும். காலேஜ்லேந்து லதா என்னோட காதலி.ரொம்ப நாள் நெருக்கமான பழக்கம்.அப்பா அம்மா நம்மோட காதலுக்கு ஒப்புக்கொள்ளமாட்டாங்க. இந்த கல்யாணம் நடக்க விடுங்க என்று ரொம்ப கெஞ்சினாள். நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.ஆனால் மனம் கேட்க மாட்டேங்கறது.ஒரே ஏமாற்றமாக இருக்கு.அப்புறம் ஏதாவது தொழில் ஆரம்பிக்க உதவி பண்ணுவதாக சொன்னாள்.கல்யாணத்துக்கு அப்புறம் அவளை சந்திக்க விருப்பமில்லை.அதுதான் உங்க கிட்ட வந்தேன்."என்றான்.

"எனக்கு ஒண்ணும் புரியலை.அவள் மேடையில் இருக்கா.அப்புறம் கேட்டு சொல்றேன்.எனக்கு வேலை நிறைய இருக்கு."என்றார் அப்பா.

"உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் லதாவையே பார்த்து பேசறேன்.ஆனால் ஏதாவது ஏடாகூடமாகி விடப்போறதுன்னு யோசனை. "என்றான்

"வேண்டாம் வேண்டாம்,உங்களுக்கு என்ன உதவி தேவை? சொல்லுங்க.நல்ல வேலை பார்த்து தரேன்."என்றார்

"வேலை வேண்டாம்.சொந்த தொழில் பண்ண ஆவல்.முதலீடு செய்ய பணம் தேவை"என்று இழுத்தான்.

கொஞ்சம் ரூமிற்கு வாங்க.அங்கே பேசலாம்"என்று அழைத்து சென்றார்.

"காபி சாப்பிடுங்க.ஒரு நிமிஷத்தில வந்துடறேன்"என்று போனார்
சிறிது நேரத்தில் பெண்,மாப்பிள்ளை பையனோடு வந்தார்.

இவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை.முகத்தில் பேயடித்தது.
சுதாரித்துக்கொண்டு "நான் வேணா அப்புறம் வந்து பேசிக்கறேன்.உங்க வேலையை கவனிங்க"என்றான்.

"இல்லை,இல்லை,இப்பொழுதே பேசி தீர்த்துக்கலாம்.எதற்கு தள்ளி போடுவது? லதா, நீ என்ன சொல்றே "என்றார்.

"முதல்ல இவர் யார், என்ன வேணுமாம் அதை சொல்லுங்க, அப்பா"என்றாள்

"உன்னோட ரொம்ப பழக்கமாம்.நீ அவருக்கு பண உதவி பண்றேன்னு சொல்லிருந்தாயாம்.அதனால ஒரு லக்ஷம் கொடுங்க என்கிறார்"என்றார் அப்பா

"எனக்கு இவர் யாருன்னே தெரியாது.எங்க ஆபீஸ் பக்கம் பார்த்து இருக்கேன்.இவரிடம் இதுவரை பேசினது இல்லை"என்றாள்.
.
அந்த சமயம் ஒரு போலீஸ்காரர் வந்து மாப்பிளை பையனை சல்யூட் அடித்து கமிஷனர் வந்து கொண்டு இருக்கிறார், சார்" என்றார்.

"சரி, இன்ஸ்பெக்டரை அனுப்பு உடனே" என்றான் மாப்பிளை பையன்.

வாலிபனுக்கு உதறல்.அவனுக்கு மாப்பிள்ளை பையன் போலீஸ்ல அதிகாரின்னு தெரிஞ்சு போச்சு. "நான் வரேங்க.என்னை விடுங்க"என்றான்.

அதற்குள் இன்ஸ்பெக்டர் வர அவரிடம் "இவரை நன்னா கவனித்து அனுப்பியுங்க."

அப்பாவை பார்த்து "இன்ஸ்பெக்டரிடம் எல்லாம் சொல்லி நன்னா கவனிச்சுக்க சொல்லுங்க" என்றான்.

"சரி சார்,நம்ம ஜீப் வண்டியிலேயே அவரை எந்த இடத்துக்கு போகணுமோ அங்கே அழைத்துக்கொண்டு போகிறேன்" என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்து அவனை தள்ளாத குறையாய் தள்ளிக்கொண்டு போனார்.

லதா மனதுக்குள் சிரித்துகொண்டாள்.
.

Thursday, June 16, 2011

சிறுமியின் பெருந்தன்மை

சமீபத்தில் பெருமாள் கோவிலுக்கு போவதற்காக பல்லவன் வண்டியில் ஏறினேன்.டிக்கட்டு 3.50 ரூபாய்.கையிலோ 23 ரூபாய்தான். இருந்தது. சில்லறை இருக்கா அல்லது இல்லையா என்று பார்க்காமல் "சில்லறை இல்லை.விலையை சரியாக கொடு,இல்லாவிட்டால் கீழே இறங்கு" என்று நிர்தாக்ஷின்யமாக கண்டக்டர் சொல்லி விட்டார்.எவ்வளவு கெஞ்சியும் தயவு தாட்சிண்யம் இல்லாமல் கறாராக இருந்தார். யாரோ முன்பின் தெரியாதவர் 50 பைசா நாணயத்தை கொடுத்து என்னை கீழே இறங்கவிடாமல் தப்ப வைத்தார்.மனதில் ஒரு கனம்.முதலில் இருந்த உற்சாகம் மறைந்து விட்டது.

அன்று கோவிலில் பெருங்கூட்டம்.வாசலில் செருப்பை விட்டு உள்ளே சென்றேன்.ஒவ்வொரு முக்ய சன்னிதியாக சென்று பிரார்த்தித்து விட்டு வெளியே வந்தேன். சுமார் 9 வயது சிறுமியிடம் டோக்கனை கொடுத்தேன்.அடுத்த க்ஷணமே செருப்பை கொடுத்து ஐம்பது பைசா என்றாள்.ஜேபியில் கை விட்டேன்.அதே 20 ரூபாய் நோட்டு

."சில்லரை இல்லையே,அய்யா"என்றாள்.

"என்னிடமும் இல்லையே பெண்ணே,கொஞ்சம் பாரேன்" என்றேன்.

பக்கத்தில் உள்ள பூக்காரி தேங்காய் பழம் விற்பவர்களிடமும் கேட்டாள்.அவர்கள் கை விரித்து விட்டனர்.நானோ கைகளை பிசைந்து கொண்டு செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தேன்.

"ஐயா இன்னொரு தடவை வரும்போது கொடுங்க.பரவா இல்லை" என்றாள் சிரித்தபடியே.களையான முகம்.குடும்பத்தின் ஏழ்மை தென்பட்டது. ஆனால் என்ன பதவிசு,தாராள மனப்பான்மை இந்த சின்ன வயதிலேயே.
ஒரு வேகத்தில் "இந்தா, நீ இந்த 20 ரூபாய் முழுக்க நீயே வெச்சுக்கோ.சில்லரை தர வேண்டாம்"என்றேன்.

"எனக்கு வேண்டாம்.நாளைக்கோ இல்ல எப்போது நீங்க இங்க வரீங்களோ கொடுத்தா போரும்" என்றாள்.

மனதில் அந்த கண்டக்டரின் உதாசீனமும் ஈரமில்லாத மனப்பான்மையும் இந்த ஏழை சிறுமியின் பெருந்தன்மையும் நிழலாட ஆரம்பித்தது..நற்குணங்கள் அந்தஸ்திலோ வயதிலோ சம்பந்த பட்டது இல்லை ,இயல்பாகவே வருபவை என்று புரிந்தது. இன்னொன்றும் தெரிந்தது.ஏற்கனவேயே சில்லறை இல்லாமல் பட்ட அவதியை மனதில் கொள்ளாமல் செருப்பை விட்ட என் முட்டாள்தனமும் புரிந்தது

Friday, June 10, 2011

உங்களுக்கு புரிந்ததா?



லலிதா மாமிக்கு 50 வயது இருக்கும்.நல்ல உயரம்,களையான முகம்,கண்களில் ஒரு சிரிப்பு, நடையில் ஒரு கம்பீரம்,விசாலமான நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன் லக்ஷ்மீகரமா இருப்பாள்.
பாவம் மாமிக்கும் மாமாவிற்கும் ஈடே கிடையாது.அவர் கச்சலா சற்று குள்ளமா,தூக்கின பற்களோடு பார்க்க நன்றாக இருக்கமாட்டார்.எப்பொழுதும் முகத்தில் சிடுசிடுப்பு.சிரிப்புக்கு அவரிடம் பயம் போலும்,கிட்டவே வராது. உரக்க பேச மாட்டார் ஆனால் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருக்கும்.மாமி கண்டுக்கொள்ள மாட்டாள்.கிட்டவும் போகமாட்டாள்.எனக்கு அந்த சின்ன 14 வயதிலும் அவர்களிடம் அன்யோன்யம் குறைவு என்று உள்ளூர பட்டது.
மாமா எப்போதும் என்னிடம் அதட்டலாகவே பேசுவார்.எங்கள் வீட்டில் பின்பக்கமுள்ள இரண்டு அறைகளில் அவர்கள் குடித்தனம்..ஒரு நாள் நான் மாமியிடம் மாமா எப்பொழுதும் என்னிடம் எரிந்து விழுந்து கொண்டே இருக்கிறார் என்று சொன்னேன்.
" அவர் ஒரு முசுடு. அவரை கண்டு கொள்ளாதே.வாத்சல்யம்னா வீசை என்ன விலைன்னு கேட்பார்..அவர் இருக்கும் போது வராதே'என்றாள்.
என் தலை மயிர் சுருள் சுருளா தியாகராஜ பாகவதர் மாதிரி நீண்டு இருக்கும்.மாமிக்கு அதை கோதிவிட பிடிக்கும். மாமி அடிக்கடி தின்பதற்கு ஏதாவது கொடுத்துகொண்டே இருப்பாள்.நானும் பள்ளிக்கூடம் விட்டவுடன் 4 மணிக்கெல்லாம் மாமியுடன் தான் இருப்பேன்.
என் அம்மாக்கூட ஒரு நாள் " வயசு பதினைந்து ஆகப்போகிறது. உடம்பு தான் வளர்ந்து இருக்கே தவிர புத்தி குழந்தை மாதிரிதான் இன்னும் இருக்கு. .ஆண்பிள்ளையா விளையாடப்போகாமல் எப்போதும் மாமியோட என்ன?வெளில போய் விளையாடு"என்றாள்.இருந்தாலும் எனக்கு மாமியுடன் இருக்கத்தான் பிடிக்கும்.
மாமிக்கு ஒரே பெண்.மாமாவிற்கு ஏதோ சின்ன வேலை.சம்பளம் அதிகமில்லை.கஷ்ட ஜீவனம்.எப்படியோ தன்னிடமிருந்த நகைநட்டெல்லாம் போட்டு கல்யாணம் பண்ணிகொடுத்து விட்டாள்.மீந்தது கைகளில் ஒரு ஜோடி தேய்ந்து போன வளையல்கள்,கழுத்தில் ஒரு மெலிதான சங்கிலி தான். இருந்தும் பெண்ணிற்கு அப்பாவிடம் தான் பாசம் அதிகம்.மாமியுடன் எப்பொழுதும் சலிப்புடன் பேசுவாள்.வாரா வாரம் வருவாள் ஆனால் ஆசையுடன் அன்பாக ஒரு தடவை கூட பேசி பார்த்தது இல்லை.
ஒரு நாள் மாமி என் அம்மாவிடம் கண்களில் கண்ணீர் ததும்ப சொல்லி கொண்டிருந்தது என் காதில் விழுந்தது."மாமி உங்கள் பெண்கள் எல்லாம் எவ்வளவு அன்பாக 'அம்மா'அம்மா 'என்று உங்கள் காலை சுற்றி வருகிறார்கள்.எனக்கு கொடுப்பினை இல்லையே. ஒரே பெண் என்று ஆசையாக வளர்த்தேன்.கொஞ்சம் கூட பாசமில்லாமல் 'நீ கழுத்தில் போட்டுண்டு இருக்கியே அந்த சங்கிலி உனக்கு எதற்கு?என்னிடம் கொடுத்து விடு.என் மாமியார் உங்க அம்மா அப்பா பண்ணினது போறாது' என்று சண்டை போடுகிறாள்."
"கவலை படாதே,லலிதா.அந்த பெண்ணை என்ன கொடுமை படுத்தராங்களோ நமக்கு என்ன தெரியும்?ஏதோ சுவாதீனத்தில கேட்டு விட்டாள். மனதை சங்கட படுத்திக்காதே' என்றாள். என் அம்மா.எனக்கு மாமியை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.
ஒரு நாள் சீக்கிரம் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டேன்.அம்மா எங்கயோ போயிருந்தாள்.நான் மாமியுடன் பேச போய் விட்டேன்.என்னை பார்த்தவுடன் மாமிக்கு ஒரு சந்தோஷம்.பசியாக இருக்கும் சாப்பிடு என்று இரண்டு வடை கொடுத்தாள்.வழக்கம் போல என் தலையை கோதிவிட்டுக்கொண்டு இருந்தாள்.எனக்கு இதமாக இருந்தது.நானும் நெருங்கி உட்கார்ந்தேன்.
"ராஜு,நீதான் எனக்கு ஒரு ஆறுதல்.என்னோட வாழ்க்கையில் அன்போ ஆதரவோ கண்டதில்லை.உன்னை பார்த்தவுடன் கவலை எல்லாம் மறைந்து விடுகிறது."என்றாள் மாமி.
அந்த சமயம் மாமா எதிர்பாராது உள்ளே நுழைந்தார்.எங்களை பார்த்தவுடன் கண்களில் ஒரு கோபம்.வாயில் கனல் தெறித்தது.
"என்ன அசிங்கம் இது.போடா வெளியே.இங்கே மறுபடி வந்தால் என்ன ஆகும்னு சொல்ல முடியாது'என்று உரக்க கத்தினார்..
“ என்ன அபத்தமான பேச்சு.அவன் குழந்தை.உங்கள் கல்மிஷத்தை எல்லாம் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்”.
"எனக்கு எல்லாம் தெரியுமடி.நான் ஏமாளம் நு தப்பா கணக்கு போடாதே. அவன் குழந்தை இல்லையடி,கோட்டான்.இது எவ்வளவு நாளா நடக்கிறதுனும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு ."என்னை பார்த்து போடா வெளியே.வெக்கம் கெட்டவனே"என்றார்.
"அவன் மனதிலே விஷத்தை விதைக்காதீங்க.விகல்பமில்லாத குழந்தை அவன்" என்றாள் மாமி.
பளீர்னு மாமி முதுகில் ஒரு அடி விழுந்தது.அவளை உள்ளே தள்ளிக்கொண்டு கதவை சாத்தினார்.நான் வெளியே ரொம்ப நேரம் நின்றுகொண்டு மாமி விசும்பும் குரலை கேட்டு கொண்டிருந்தேன்.
மறு நாள் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பினபிறகு நேரே பின்பக்கம் மாமியின் பகுதிக்கு சென்றேன்.கதவில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது.அம்மாவிடம் ஓடி வந்து "அம்மா,மாமி வீடு பூட்டி இருக்கே,ஏன்?'என்று வினாவினேன்.
"என்ன காரணம்னு தெரியலை.மாமா வந்து'இங்கே சௌகரிய படலை வேறு வீட்டுக்கு போகிறோம் "என்று சொல்லி சாவியை கொடுத்து விட்டு போய்விட்டார். .லலிதா என்னிடம் வார்த்தைகூட சொல்லிக்காம போனாள்.எவ்வளவு வருஷ பழக்கம்,இப்படியா நிர்தாக்ஷின்யமா இருப்பா மனிதர்கள்.எங்கே போகிறோம்னு கூட சொல்லலை. எனக்கு ஒன்னும் புரியலை"என்றாள். .
எனக்கு ஏதோ லேசாக புரிந்த மாதிரி தோணித்து . மனம் கனமாக இருந்தது.


Wednesday, June 1, 2011

ஒட்டியாணம்

ஒரு நாள் விஷ்ணு பகவானுக்கு ஏதாவது வேடிக்கையா பண்ணனும் போல இருந்தது.அப்படியே மாறு வேஷம் போட்டுக்காமல் பூமியில் இறங்கி வந்தார். இரவு நேரம்.அதிகம் மனித நடமாட்டம் இல்லை. ஏட்டு மாணிக்கம் வழக்கம் போல ரோந்து வந்து கொண்டிருந்தார்.
" என்னய்யா ட்ராமாலேந்து வேஷத்தை கலைக்காமல் அப்படியே வந்து விட்டே?பார்த்தால் விஷ்ணு மாதிரியே இருக்கே" என்றார்.
"இல்லையே, நான் எப்பொழுதும் இருக்கிற மாதிரி தானே இருக்கேன்"என்றார் விஷ்ணு.
:என்ன, தண்ணி கிண்ணி போட்டுவிட்டு வந்து இருக்கியா?"
"எனக்கு தாகம் பசி எல்லாம் கிடையாது.ஒரு மாறுதலுக்காக அதிர்ஷ்டவசமாக யாரால் என்னை பார்க்க முடிகிறதோ அவர்களுக்கு தரிசனம் கொடுக்கலாம் என்று ஒரு அவா.நீ தான் முதல் ஆசாமி." என்றார் பகவான்
"பார்த்து பேசு.மாமன் மச்சான் மாதிரி நீ போட்டு பேசறியே.சும்மா ரீல் விடாதே.உள்ளே தள்ளி விடுவேன். புரிஞ்சுதா?' ஏட்டையா கோவப்பட்டார்
பகவான் மெலிதாக அவன் அறியாமையை கண்டு புன்னகைத்தார்
"என்ன சிரிக்கரே .இந்த டுபாகூர் வேலை எல்லாம் வேண்டாம். நீ போட்டுண்டு இருக்கியே பளபளன்னு அதெல்லாம் டூப்ளிகேட் தானே?எங்க அடிச்சே? உண்மையை சொல்லு"என்றார் மாணிக்கம்
"இல்லையப்பா,எல்லாம் நிஜ தங்கம்.வைரம் வைடூரியம் மாணிக்கம் எல்லாமே அப்பழுக்கு இல்லாதது.உனக்கு எது வேண்டுமோ தயக்கப்படாமல் கேள்" என்றார் இறைவன்.
ஏட்டுக்கு ஒரே குழப்பம்.ஒரு வேளை இது நிஜ தங்கமாக இருந்தால் அஞ்சலை எவ்வளவு சந்தோஷப்படுவாள்.இது வரை ஒரு குந்துமணி தங்கம் கூட வாங்கி கொடுத்தது இல்லை.ஆளை பார்த்தால் தப்பா படலையே.பின்னே பைத்தியக்காரனா இருக்குமோ.தடிதடியா போட்டுண்டு இருக்கானே கட்டாயம் பித்தளையாகத்தான் இருக்கும்.
"சும்மா அளக்காதே.இவ்வளவு தங்கம் ரொம்ப பணக்காரன்கிட்ட கூட இருக்காது.நீயோ டிராமாக்காரன்.நிஜத்தை சொல்லு.இல்லாட்டி ஸ்டேஷன் இட்டுண்டு போவேன்" என்று பயமுறுத்தினான்.
"நீ எவ்வளவு தடவை கேட்டாலும் என்னுடைய பதில் அதேதான்" என்றார்.
"அப்போ சரி,எனக்கு உன்னோட ஒட்டியாணத்தை கொடு. கல்லெல்லாம் புதைச்சு இருக்கு.என்னோட பெண்சாதிக்கு பிடிக்கும்" என்று கேட்டு வைத்தார் ஏட்டு.
"இந்தா. எடுத்துகொள்.திருப்தி தானே? ஆனால் ஜாக்கிரதை! யாராவது உன்னிடமிருந்து பிடுங்கி கொள்ளாமல் பார்த்துகொள்.இனிமேல் உன் கண்களுக்கு நான் தெரியமாட்டேன்" என்று சொல்லி மறைந்தார்.
மாணிக்கத்துக்கு ஒரே புல்லரிப்பு.தன்னுடைய அதிர்ஷ்டத்தில் ஒரே ஆச்சரியம். வீட்டுக்கு ஓடிவந்து "அடியே,உனக்கு ஒட்டியாணம் பாரு,போட்டுக்கோ ரொம்ப அழகா இருப்பே" என்று சப்தமாக சொன்னார்.
அவ்வளவு தான் தெரியும்.இடி கனமாக முதுகில் ஒரு அறை விழுந்தது." யாரைய்யா அந்த பொம்பளை?அவ இடுப்புக்கு ஒட்டியாணம் கேக்குதோ?வெக்கம் கேட்ட மனுஷனுக்கு ஒரு நகை வாங்கி போட வக்கு இல்லை.ஏதோ கேடுகெட்ட பொம்பளைக்கு ஓடடியாணமாம்.தூக்கத்தில கூட அவ எண்ணமா?கடவுளே என் வாழ்க்கை இப்படி ஆயிடுத்தே"என்று உரக்க புலம்பலானாள்.
மாணிக்கம் பரக்கப்பரக்க கண்களை துடைத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.