Wednesday, October 19, 2022

நிம்மியின் நன்றி கடன்





ஒன்பது மணிக்கே கிளம்பியும் நிர்மலாவிற்கு  எதிர்பாராத இந்த போக்குவரத்து தடையினால் ஆபீஸ் போய் சேர ரொம்ப தாமதம் ஆகும் போல தோன்றுகிறது... ஒரே ஹார்ன் சத்தம். காதை பிளக்கிறது.மற்ற நாட்கள் என்றால்  இவ்வளவு   எரிச்சல் படமாட்டாள்.  சி காரில் தனக்கு பிடித்த ஸ்ரேயா கோசாலினதோ அல்லது பிருந்தா மாணிக்கவாசகத்தின்   பாட்டையோ   நிம்மதியாக ரசித்து கொண்டிருப்பாள். இன்று பத்தரை  மணிக்கு . நேர்முக தேர்வு..மூத்த அதிகாரியான அவள் தலைமையில்   தான் நடைபெறவுள்ளது.மணி ஒன்பதே முக்காலை தாண்டிவிட்டது.

நீண்ட ஹாலை வேகமாக கடக்கும் போது  வழியில் ஒரு முதியவர் நிற்பதை  பார்த்து சற்று   நின்றாள்..வயது எழுபதுக்கு  மேல் இருக்கும்.ரேகை படிந்த முகத்தில் மழிக்கப்படாத ஐந்து நாட்கள் தாடி.பண வசதி இல்லாதவர் போல் தென்பட்டார்.பழக்கமான முகம் போல் தெரிகிறதே   என்று ஒரு நொடிதான் யோசித்தாள்.படக்கென்று நினைவுக்கு வர,"நீங்க பழனி தானே? “என்றாள்

அவர் கைகளை தூக்கி கும்பிடும் போது வலது கையில் பழனி  என்று பச்சை   குத்த பட்டு இருந்ததை   பார்த்தாள். அவள் மனம் இருபது வருடங்களுக்கு மேல் பின்னோக்கி சென்றது.அவர் இன்னும் யோசனையில் இருந்தார்."என்னை ஞாபகம் உள்ளதா? சாமியார்   மடம் பஸ் ஸ்டாப்பில்    18  வயதிலிருந்து   நிம்மியை நான்கு வருடங்கள் வருடங்கள்   உங்கள் பஸ்ஸில் காலேஜ்க்கு அழைத்து செல்வீர்களேநினைவுக்கு வருதா?" என்றாள் சிரித்த வண்ணம்.

 அவர் முகத்தில் சற்று வெளிச்சம்.." தினமும் லேட்டடாக வரும் பெண்தானே?நிம்மியோ ,ஜிம்மியோன்னு பேரு,"என்றார்....

ஆமாம் அவளேதான் நிம்மி.. தினமும் இல்லை.பாதி நாட்கள் தாமதமாக வரும் எனக்காக 10 நிமிடங்கள் கூட காத்து கொண்டு இருப்பீங்க  .,ஒரு நாளும் முகத்தை சுளிக்க மாட்டீங்க.பாப்பா சீக்கிரம் வரணும் மத்தவங்களை காக்க வைக்க கூடாது என்று மெள்ள சொல்லுவீங்க  ஆமாம் இங்கே எங்கே? ." என்றாள்

என்னோட பேரனுக்கு இங்க தேர்வாம். அங்க தூரத்தில ஒல்லியா நீல சொக்காய் போட்டுண்டு இருக்கானே அவன்தான் என்னோட பேரன்.  நிம்மிஇங்க வேலை பண்றியா?    .உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா உதவி பண்ணுங்க," என்றார்.

"சரி, ரொம்ப   வருடங்களுக்கு பிறகு உங்களை பார்த்து பேசியதில் சந்தோசம். எனக்கு நாழி ஆகிறது," எனக் கூறி வேகமாக தன் அறைக்கு சென்றாள்.  குளிர்ந்த அறையில் நுழைந்ததுமே தன்  உதவியாளரை கூப்பிட்டு,"  15 நிமிடங்களுக்கு பிறகு தேர்வு குழு அதிகாரிகளை வரச்சொல்லு.அப்புறம் தேர்வுக்கு வந்தவர்களை அனுப்பலாம்," என்றாள்

கண்களை மூடிய பிறகு பழைய எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்தது..கால்களில் மூட்டு வலியோடு அவஸ்தை பட்டுக் கொண்டே  அம்மா மதிய உணவை வேகமாக செய்து முடித்து டப்பாவில்   வைப்பதற்குள் பஸ்ஸின் ஹாரன் தூரத்தில் ஒலிக்கும். அவசர அவசரமாக நிம்மி ஒரு கையில் புத்தகப் பையும் மற்றொன்றில் டப்பாவும்  தெருவில் ஓடுவாள்.100 கஜங்கள் தான்.ஆயினும் வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸுக்குள் ஏறுவது   நித்தியம் நடக்கும் சமாச்சாரம் தான்.ஆனாலும், "மெள்ள வா பாப்பா,விழுந்துட போரே ,"என கரிசனம் காட்டும் பழனி   ஒரு நாள் கூட முகத்தில் எரிச்சலை காட்டியதில்லை. தன்னை ஒரு நாள் கூட ஏற்றிக்  கொள்ளாமல்  சென்றதுவும்  இல்லை.

அறைக்கு உள்ளே   குழுவினர் நுழைய ஆரம்பித்தவுடன் தன்னை சுதாரித்து கொண்டு மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள்..விண்ணப்பதாரிகள் ஒருவர் ஒருவராக கிட்டத்தட்ட 30 நபர்கள்  பரிசீலிக்கப்பட்டு சென்று விட்டனர்.மணி  இரண்டு   ஆகிவிட்டது மதிய உணவுக்கு செல்ல வேண்டிய நேரம். நிர்மலாவின் உதவியாளர் "இன்னும் இரண்டு நபர்கள் தான் பாக்கி," என்றார்..அவர்களையும் அனுப்ப சொன்னாள்.

மனதில் மாணிக்கத்தின் பெயரும் நீல சொக்காயும் ஞாபகம் இருந்தது.அடுத்த நபரும் வேறு யாரோ.பழனியின் முகம் ஒரு நொடி கண் முன்னே தோன்றியது. மனதில் ஒரு சின்ன சஞ்சலம் அந்த தருணத்தில் நீல சொக்காயுடன் மாணிக்கம் கடைசி நபராக உள்ளே நுழைந்தான்..அவன் விண்ணப்பத்தை கவனமாக பார்த்தாள். .கேட்க பட்ட தகுதிகள் இருந்தது.ஓகோவென சொல்ல கூடிய அளவிற்கு இல்லாமல் இருந்தும் மற்றவர்களுக்கு சோடை போகவில்லை.மற்ற குழுவினர் ஒன்றும் கேட்கவில்லை.

மாணிக்கம், இன்னும் ரெண்டு மூன்று நாட்களில் தகவல் வரும்.," என சின்ன புன்முறுவலுடன் சொன்னாள்

வெளியில் பழனி ஒரு எதிர்பார்ப்போடு  ஓரமாக நின்று கொண்டு இருக்கையில்  மாணிக்கம் ' தாத்தா ,நேர்முக  பரிக்ஷை முடிந்தது,"என கூறினான்..

"வேற ஏதாச்சும் சொன்னாங்களா?  நான் அந்த பெண்ணை பார்த்து கேட்கிறேன்.. இங்கேயே இரு,"என்று பழனி சொன்னதும்,," தாத்தா  ,அங்க எல்லாம் போக கூடாது..இன்னும் மூன்று நாட்களில் தகவல் வரும் என்று சொன்னாங்க . எனக்கு கிடைக்கும்னு தோணுகிறது, வாங்க போகலாம்," எனக் கூறினான்.

மாடி படிகளில் இறங்கும்போது,"பழனி,பழனி" என குரல் கேட்டு திரும்புகையில் நிர்மலாவே வேகமாக வந்து," மாணிக்கத்துக்கு வேலை கொடுப்பதாக முடிவு பண்ணிட்டாங்க.இன்னும் மூன்றே நாட்களில் தகவல் வரும்.கவலையே வேண்டாம், ஜாக்கிரதையாக  போயிட்டு வாங்க," என்றாள்..  

"ஏதோ தினம் பஸ்ஸில போய்   இட்டாந்ததை     பெரிசா  நினைச்சுகிட்டு  உதவி பண்றீங்களே நீங்க நன்னா இருக்கணும்.ரொம்ப நன்றி அம்மா,: என்று விடை பெற்றார் பழனி. 

"தாத்தா, இங்க வந்து பேசின அம்மா தான் பெரிய அதிகாரி.. அவங்க தலைமையில் தான் தேர்வே நடந்தது,” என்றான் மாணிக்கம்.  


Wednesday, September 28, 2022

அமலாவின் ஆறுதல்

அமலா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள்.லேசாக தலை வலி. ஏசி ஓடிக் கொண்டிருந்தாலும் சற்று புழுக்கம்.செல்லதுரை பக்கத்தில் ஆழ்ந்த  தூக்கத்தில் இருந்தான். சத்தம்   போடாமல் எழுந்து மேஜையின் மேல் டோலோ     இருக்கிறதா என்று இருட்டில் துழாவி .பார்த்தாள்.ஓரத்தில் இருந்த ஒரு புத்தகம் கீழே விழுந்தது.

சப்தத்தை கேட்டு செல்லதுரை கண் விழித்து, "அமலா, நள்ளிரவில் தூங்காமல் என்ன தேடிக்கொண்டிருக்கே? " என்று கேட்டான்.

"சாரி, இருட்டில புத்தகம் தவறி விழுந்து விட்டது. சற்று தலை வலி..மாத்திரை தேடி .கொண்டிருந்தேன். நீங்க தூங்குங்க,".என்றாள்.

"நானும் பார்த்து கொண்டுதான் இருக்கேன். நீ முக்கால் வாசி நாட்கள் இரவில் சரியாக  தூங்குவதே இல்லை.காரணம் எனக்கு தெரியும்.இழப்பு நம்மிருவருக்கும் தானே? நிர்மலா  இறந்து இரண்டு வருடங்கள் மேலாகிவிட்டது. அதையே நினைத்து கொண்டு தூங்காமல் இருந்தால் அவள் திரும்பி வர போகிறாளா? உன் உடம்பு தான் கெடும்..இந்தா,இந்த மாத்திரையை சாப்பிடு. தூக்க மாத்திரை இல்லை. மனதை சாந்தப்படுத்தும்.இங்கே வந்து படு." ஒரு கையால் அவளை அணைத்து கொண்டு,மற்றொரு   கையால் தலையை லேசாக பிடித்து விட்டான் அவளும் அவனருகில் இறுக்கமாக நகர்ந்தாள்.சிலநிமிடங்க ளிலேயே அவளும் அந்த இதத்தில்    தூங்கி விட்டாள்.

மறு நாள் அவள் வகுப்பில் நுழைந்தவுடன் முதல் பென்ச்சிலே   ஒரு புதிய  பெண்  உட்கார்ந்து இருப்பதை கண்டாள். யூனிபார்மில் இல்லாமல் நீல வர்ணத்தில் டெனிம்   குட்டை பாவாடையுடன் நீல புள்ளிகள் உள்ள வெள்ளை சட்டையுடன் காணப்பட்டாள். பன்னிரண்டு வயதிருக்கலாம். கண்கள் ஓரம் சிரிப்பும்   பார்க்க மிகவும் அழகாகவும் தென்பட்டாள்.

"புதிதாக சேர்ந்து இருக்கிறாயா? உன் பெயர் என்ன?"  என்று வினாவினாள்.வகுப்பில் ஒரு சிறிய சலசலப்பு.

"ஆமாம் டீச்சர், என் பெயர் நிர்மலா,"

தன்னோட பெண்ணின் பெயரை கேட்டவுடன் அமலாவுக்கு  ஒரு நொடி   தூக்கி வாரி போட்டது.

" திரும்ப சொல்லு உன் பெயரை," என்றாள். வகுப்பில் உள்ள எல்லா சிறுமிகளும்  தலைகளை தூக்கி  டீச்சரை ஆச்சரியத்துடன் பார்த்தன.

"நிர்மலா”, என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

வகுப்பை ஆரம்பித்த பிறகும் அவள் மனம் அந்த சிறுமியை சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி ஒரே  கண்ணால் அவளை பார்த்து கொண்டேயும் இருந்தாள்.சொல்ல முடியாத ஏதோ  ஒரு இன்பமான  உணர்வில் தன மனம் லேசாகி  விட்டது போல் உணர்ந்தாள்..

வகுப்பு முடிந்ததும் சிறுமிகள் எல்லோரும் தங்கள் நோட் புக்குகளை  அவள் மேசையின் மேல் வைத்து விட்டு சென்றார்கள்.

வீட்டுக்கு வந்த பின்னரும் அவள் மனம் அந்த புது சிறுமியை பற்றியும் தன் இறந்து போன  பெண் நிர்மலாவை பற்றியும் சூழ்ந்து கொண்டிருந்தது. என்ன ஒற்றுமை இருவருக்கும் பல விதங்களில்  என நினைத்து ஆச்சரிய பட்டாள். பெயர் மட்டும் இல்லாமல், ஒரே வயது, உடல் கட்டு.கண்கள் ஓரத்தில்   தவழ்ந்த புன்சிரிப்பு, தாழ்ந்த குரலில் பேச்சு   என நினைக்கையில் உடலெல்லாம் புல்லரித்தது  பட்டென எழுந்து சென்று கொண்டு வந்திருந்த நோட்டு புக்குகளை  எடுத்து வந்தாள். ஒரே ஒரு  நோட் புக்குக்கு   அட்டை இல்லை...அதன் மேல் அழகான எழுத்தில் கொட்டையாக நிர்மலா என எழுதி இருந்தது. அப்போதுதான் தன்  மேசை அருகில் அவள் வந்தது ஞாபகம் வந்தது,

 பக்கங்களை புரட்டுகையில் முதல் பக்கத்தில் ஏதோ எழுதி இருந்தது. ஹோம் ஒர்க்காக இருக்க முடியாதே, என்ன எழுதி இருப்பாள் என ஒரு ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.

"அன்புள்ள   அம்மா,

நான் எப்போதும்  உங்களைச் சுற்றியே இருக்கும் காக்கும் தேவதை(guardian angel) என்னை    பார்க்கா  விட்டால் மனம் வருந்த வேண்டாம் .நான் உங்கள் அருகிலேயே உங்களை பார்த்துக் கொண்டே இருப்பேன்  என்கிற  எண்ணத்தோடு   மனத்தென்புடன் இருங்க.

நிர்மலா

ஒரே பரவசமாகி திகைத்து போய் மயிர் கூச்சலுடன் நிற்கையில்  வாசல் மணி அடித்தது..

அமலாவை  பார்த்தவுடனேயே," என்ன ஆச்சு , ஏதோ காணாத காட்சியை கண்ட மாதிரி இருக்கே?"  என கேட்டான் செல்லதுரை.

"இதை பாருங்க,நீங்களே திகைத்துப் போய் விடுவீங்க.  .ஒரு புது சிறுமி இன்று வகுப்பில் சேர்ந்தாள். .நம்ம நிர்மலாவை போலவே  ஒத்த வயது,நடை உடை, பாவனை,..பெயரும் ஒன்றே,    . சிரித்த களையான முகம். .எனக்கு இன்று பூராவும் சந்தோஷம் தாங்கலை. அவள் முதல் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறா பாருங்க,"என கூறி நோட் புக்கை கையில் கொடுத்தாள்..

முதல் பக்கத்தை பார்த்து கொண்டே,  " ஒன்றுமே எழுதலையே.காலியாக இருக்கே.நீயே பாரு,"என திருப்பி கொடுத்தான்

"என்ன உளறீங்க? கண்ணு போயிடுத்தா என்ன? இதோ பாருங்க ,கொட்டை கொட்டையாக எழுதி இருக்கா, பாருங்க

நோட் புக்கை பிடுங்கி மறுபடியும்  பார்த்தான். அமலாவை உற்று பார்த்தவாறே," வெத்து பக்கம் தான்.நீ உடனே ட்ரெஸ்ஸை மாத்திக்கோ .டாக்டரை பார்க்க போகலாம்,' என்றான்   சற்று கலவரத்துடன்.உனக்கு கட்டாயம்  .மனதை அமைதியாக்க மருந்து வேண்டும்.நான் முகத்தை அலம்பி கொண்டு ட்ரெஸ்ஸை மாற்றி கொண்டு வருகிறேன்.சீக்கிரமாக   கிளம்பனும்," என்று உள்ளே சென்றான்.

கணவன்  உள்ளே    சென்ற  பிறகு  மறுபடியும் மறுபடியும்  பார்த்தாள்..அதே மணி மணியான கையெழுத்து.. தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தாள் .திடீரென அவள் முதுகில் மெலிய விரல்களினால் தடவும் உணர்ச்சி ஏற்பட்டது.உடல் முழுவதும் ஒரு புளகாங்கிதம்.   திரும்பி பார்த்தால் யாரும்  காணவில்லை.குமுறிக் கொண்டு மறுபடியும் அழுகை வந்தது. தோள்களை பிஞ்சு கையால் தட்டும் உணர்ச்சி. அருகில்   சற்று சூடான மூச்சு காற்று. அவள் சொன்னபடியே தன் மகள் நிர்மலா தன் பக்கத்திலேயே தேவதையாக உள்ளாள்  என உணர்ந்தாள்.

செல்லதுரை வந்தவுடன் ,'இப்படியே இருந்தால் நாளை டாக்டரிடம் போகலாம், இப்போ சற்று தேவலை போல இருக்கு.. காபி போடட்டுமா? பாவம்,உங்களை தொந்தரவு பண்ணுகிறேன்,"என் ஆறுதலாக கூறினாள்..

மறு நாள் ஆவலுடன் ஸ்கூலுக்கு சற்று முன்னே சென்றாள்.முதல் வகுப்பு தொடங்கியதும் சுற்றி முற்றி பார்த்தாள்.அந்த புதிய சிறுமி   காணவில்லை..ஏமாற்றத்தோடு வகுப்பை பார்த்து .  "நேற்றைக்கு வந்த  அந்த புதிய சிறுமி வரவில்லையா?' என கேட்டாள்.

 எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே  ஒரே குரலில் "புதிய  சிறுமி யாரும் நேற்று வரவில்லையே" என கூறினார்கள்.அவர்கள் தன்னை ஏதோ ஒரு விதமாக பார்ப்பது போல் தோன்றியது.

வகுப்பு முடிந்தவுடன் நேரே ஆபீஸ் ரூமுக்கு சென்று ,"நேற்று வந்த புது சிறுமி நிர்மலா  இன்று வரவில்லை..ஏன் என்று ஏதேனும்  தகவல் உண்டா?" என கேட்டாள்.

"அமலா மேடம், நேற்றோ அல்லது சமீப காலத்தில் யாரும் புதிய மாணவி    சேரவில்லையே. என்ன சொல்லுகிறீர்கள் என புரியவில்லையே," என்றாள் ஒரு  குமாஸ்தா.  .மறுபடியும் மனக் குமுறலோடு அழுகை வரும் தருணத்தில்,முதுகை யாரோ தடவி கொடுப்பது புரிந்தது,"எப்போதும் கூடவே இருப்பேன்"  என்று சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே இருக்கும் இந்த ஆறுதலே போறும்  என்று சுதாரித்து கொண்டு வெளியே வந்தாள்.

தன் கைப்பையில் ஒரு சின்ன டைரியில் இருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் புன்னகைத்தாள். மனதில் இனம் புரியா அமைதி தவழ்ந்தது. இனிப் பள்ளியில் தன் மாணவிகள் எல்லோரும் தன் மகள்தான்  என்று தோன்ற,புதிய ஆசிரியத் தாயாகி,புதிய தென்புடன் கிளம்பினாள்.

 

 








Sunday, September 25, 2022

தோல்வியிலும் புதிய பாதை

எனக்கு என்ன  செய்வது  என்றே  தெரியலை..  யாரிடமாவது  சொல்லி அழணும்   போல இருக்கு.   பத்தாவது வகுப்பில்  பெயிலாகி விட்டேன்.. மற்ற  பையன்கள் பெண்கள் எல்லோரும்  சிரித்து கொண்டும்   தோள் மேல்  கை போட்டு கொண்டு சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் என் அருகில்  வரவில்லை.. புனிதா  மட்டும் என்னை  ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு இருந்தது   எனக்கு தெரிந்தது.  அவள் முகத்தில் சிரிப்பு இல்லை.  சற்று இறுக்கம் போல தெரிந்தது. ஆனால் அவள் வகுப்பில் எப்போதும் முதல் மூன்று இடத்திற்குள் இருப்பாள். அதனால் இந்த முக வாட்டம் என்னை பற்றி தான் இருக்கணும். மற்ற பெண்கள் அவளருகில்   வந்தவுடன் அவள் கவனம் திசை மாறி விட்டது.  முக்கால்வாசிப் பேர் வீட்டுக்கு போய் விட்டார்கள்.

தற்போது என் கவலை எல்லாம், நல்ல எதிர்பார்ப்போடு    காத்துக்  கொண்டிருக்கும்,  அம்மா அப்பாவிடம்  எப்படி சொல்வது என்று தான். இந்த தேர்வு   முடிவை கேட்டால் கட்டாயம் இடிந்து போய் விடுவார்களேன்னு  ஒரு தயக்கம்.  என்னை நம்பித்தான் எங்க குடும்பத்தோட முன்னேற்றத்தை இருவரும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்பாவுக்கு கொஞ்ச நாளாகவே நெஞ்சு வலி..  வெளியில் சொல்வதில்லை,  யாரும் பார்க்காத  போது  நெஞ்சை நீவி விட்டு கொண்டிருப்பது எனக்கு தெரியும். கல்யாண சமையல் தொழில். எப்பொழுதும் சிரமமான வேலை.  அவர் வீட்டில் இருப்பது ரொம்ப குறைவு.  அம்மா இருப்பதை வைத்துக் கொண்டு ரொம்ப சிக்கனமா சமாளித்து  கொண்டிருந்தாள். பள்ளிக்கூட சம்பளம்  செலுத்துவதே கடினமான காரியம்.

என்னோட தங்கை கிரிஜா ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பில் ரொம்ப சுட்டி.. எல்லாவற்றிலும் அவள்தான் வகுப்பில் முதல்.. எப்போது   படிக்கிறாள்னு தெரியாது. அம்மாவுக்கு நிறைய உதவி பண்ணி கொண்டிருப்பாள். வாயை திறந்து எதையும் அம்மாவிடம் வேண்டுமென்று கேட்டு பார்த்ததில்லை.

கோவில் பக்கத்தில் அக்ரஹாரத்தில் ஒரு சேதமான ஒட்டு வீடு.   எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய  அபாயம் உண்டு. தரை எல்லாம் பேர்ந்து இருக்கும். சாணியில் மெழுகி காப்பாற்றிக்     கொண்டு வருகிறோம். வீடு கோயிலை   சேர்ந்ததா அல்லது  வேறு யாருக்கு சொந்தமா என்று கூட  தெரியாது. யாரும் வாடகை கொடுப்பதில்லை. கார்ப்பரேஷன் லாரி தண்ணி தான்.. கிரிஜா எப்போதும்  தண்ணி வாளியுடனோ   அல்லது       ஊசியும் கிழிந்த பாவாடையை தைத்து கொண்டோ  இருப்பது தான்  என் கண் முன் நிற்கிறது

ஒரு ஓரத்தில் இந்த கவலைகளோடு மூழ்கி  இருக்கையில் முற்றிலும்  எதிர்பாராதவிதமாக என்னோட ஆசிரியர்  கந்தசாமி  சார்   நான் தனியாக  இருப்பதை பார்த்து என்னருகில் வந்தார்..  சற்று வயதானவர்,என் அப்பா சுந்தரம் அவரின்  பால்ய   நண்பர். . என்னிடம் வாஞ்சையாக இருப்பார்,  என் முதுகை தடவி கொடுத்து கொண்டே சொல்லலானார்.  என் முகத்தைப் பார்த்தே தேர்வு  முடிவு அவருக்கு தெரிந்திருக்கும்..

“செல்லப்பா, எதற்கும் கவலைப் படாதே. எல்லோருக்கும் எல்லாம் கை கூடுவது  இல்லை. ஒவ்வொருவருக்கும்  சில திறமையும்  சில தோல்வியும் இருக்கும் .. உனக்கும்  கணக்குக்கும் சரிப்பட்டு வரலை.. டியூஷன் வைப்பது உன் அப்பா சம்பாத்தியத்தில் நினைச்சு கூட பார்க்க  முடியாது.  நானோ  தமிழ் ஆசிரியர்.  என்னால் உனக்கு சொல்லி தரவும் இயலாத நிலை .   அனாவசியமா இன்னொரு வருடம்  படித்து நேரத்தை விரயமாக்குவதில்  பிரயோஜனமில்லை.  புத்தக படிப்பு தான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி என்று  சொல்ல முடியாது. அநேகம் பேர் ஏனைய தொழில்களில்  நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.  இன்று இரவு எட்டு மணி அளவில் நேரில் வந்து பார்க்கிறேன் என்று    அப்பாவிடம் சொல்லு,"என்றார்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மா என் முகத்தை உற்று பார்த்தவுடன் ஒரு நொடியில்  ஒன்றும் பேசாமல் தன்னை சுதாரித்துக்   கொண்டு, “நாழி ஆகிறது, சாப்பிட வா," என்றாள்.

அங்கே வந்த அப்பாவிடம், “குழந்தை சாப்பிடட்டும்.அப்புறம் பேசலாம்,"என்றாள்

"ரொம்ப பசியாமோ?" என நக்கலுடன்  கேட்டு விட்டு நகர்ந்தார்.

சாப்பிடுகையில் சன்னமாக , “அப்பா எது பேசினாலும் பதில் சொல்லாதே.. பொறுமையுடன் கேட்டுக் கொள்," என்றாள்.

"அப்பாக்கு தெரியுமா? யார்  சொன்னாங்க? " என கேட்டேன்.

மெலிதாக சிரித்துக் கொண்டே,"உன்னோட முகம் தான்" என்றாள்

அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தார்.

"கந்தசாமி சார், என் தமிழ் ஆசிரியர் இரவு  எட்டு  மணிக்கு வருவதாக சொல்லச் சொன்னார்," என தாழ்ந்த குரலில் சொன்னேன்.

“எதுக்கு? துக்கம் விசாரிக்கவா?அவர் வந்து உன்னோட தலை எழுத்தை மாற்ற   முடியுமா?. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கே,  ஸ்கூலுக்கு தலை முழுகிப்  போட்டுவிட்டு   நீயும்   என்னை மாதிரி கையில் கரண்டியுடன் சமையல் வேலைக்கு நாளைலேர்ந்து வா. அதுக்கு தான் லாயக்கு. இப்போ சற்று என்னை தனியாக விடு," என்று கூறி விட்டு முகத்தை திருப்பி கொண்டு விட்டார். கிரிஜா என் கையை பற்றி ஆதரவாக வெளியில் அழைத்து சென்றாள்.

சொன்னபடியே கந்தசாமி சார் வந்தார்.  “செல்லப்பா, நீ வெளியே இரு," என்று அப்பா எரிச்சலுடன் கூறினார்.

"சுந்தரம், நாம பேச போவது அவனை பற்றிதான்,அவனும் கூட இருக்கட்டும்,"என்றார் கந்தசாமி

"உன்னோட ஆதங்கம் தெரியும் .இருந்தும் நீ நான் சொல்வதை பொறுமையாக பதட்டப் படாமல் கேட்கணும், சரியா?" என்று ஆரம்பித்தார். என்னை பார்த்து “என்னருகில் உட்கார்," என்றார்..

“உன் மகன் மக்கு இல்லை. இதை நன்றாக புரிந்து கொள். தமிழில் அவன் வகுப்பில் முதல் ஐந்து   இடங்களில் இருக்கிறான்.. தமிழில் ஆர்வம் இருக்கிறது. கணக்குதான் வருவதில்லை. அதனால் தோல்வி அடைகிறான்.

சாதாரணமாக புத்தக படிப்பு இருந்தால் வாழ்க்கையில்  முன்னேறுவது சுலபம். ஆனால் நிறைய மக்களுக்கு படிப்பு   எளிதில் அமைவதில்லை.. காரணங்கள் பல உண்டு. பண வசதி இல்லாமை , குடும்ப சூழ்நிலை, சிறு வயதிலேயே வேலைக்கு போகும் நிர்பந்தம், சொந்த திறன் குறைவு  என்று  சொல்லிக் கொண்டே போகலாம். ஏற்கனவே உன் பையனிடம்   சொன்ன மாதிரி . எல்லோருக்கும் எல்லாம் கை கூடுவது  இல்லை. ஒவ்வொருவருக்கும்  சில திறமையும்  சில குறைகளும் இருக்கும்.

அநேகம் பேர் ஏனைய தொழில்களில்  நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். நான் அரசியல்வாதிகளை பற்றி சொல்லவில்லை. என்னுடைய மகனே எட்டாம் வகுப்போ என்னவோ விட்டுவிட்டு இன்று பல கடைகள் வைத்து நிறைய வருமானம்   மிக்க வசதியாக இருக்கிறான்.  அப்பா வேலையை விடு என்று வற்புறுத்துகிறான். நான் தான் இதை வேலையாக பார்க்கவில்லை.  ஒரு கடமையாக செய்கிறேன் என்று சமாதானப் படுத்துவேன். ஆகையால் மறுபடியும் படிக்க சொல்லி காலத்தையும்,பணத்தையும் விரயமாக்குவதில்  அர்த்தமில்லை,.  சரிதானே” என்றார்.

"கந்தா,  நீ என்ன சொல்ல வருகிறாய்  ?' என்றார் சுந்தரம்

“என் மகன் எலக்ட்ரிக் துறையில் பல கடைகள் வைத்து இருக்கிறான். கொள்ளை வருமானம்.  நிறைய ஆட்கள் அவன் கீழ் வேலை செய்கிறார்கள். ஆறு மாதத்தில் செல்லப்பாவை தொழிலில் அனுபவ பூர்வமாக தேர்ச்சி அடைய செய்ய முடியும்.  பிறகு அவன் ஒரு கடையை தனியே பார்த்து கொள்ள என் மகன் பொறுப்பை கொடுப்பான். சில வருடங்கள் பிறகு  செல்லப்பாவே தன் தொழிலை நல்ல இடத்தை தேர்ந்து எடுத்து தனியாக செய்யட்டும்.”

முதல் ஆறு மாதம் கொஞ்சம் பணம் தருவான். அப்புறம் அவன்  கடையின் வருமானத்தை   பொறுத்து  அவன்   சம்பளம் நிர்ணயிக்கப் படும்.  நாம் இருவரும் சம்பாதிப்பதை விட பல மடங்கு வருமானம் கட்டாயம் இருக்கும். தற்போது எங்கும் வீட்டு கட்டுமானம், நிறைய காலனிகள் வந்து கொண்டே இருக்கிறது. நல்ல மார்க்கெட் . .

சொந்த கடை துவங்கிய பிறகு  அவன் உழைப்பு, சாமர்த்தியம், கடவுள் அருள்  பொறுத்தவை. இப்போது பதினாறு வயது, இருபத்தைந்தில் நல்ல வசதியாக இருப்பான்.  என்ன  சொல்றே?" என்றார்.

"செல்லப்பா,  உனக்கு என்ன தோன்றுகிறது?  தைரியமாக சொல்லு." என்றார் சுந்தரம்

"அப்பா, நீங்க என்ன  முடிவு பண்ணுகிறீர்களோ, அதுவே என் முடிவு," என பணிவுடன்  சொன்னேன்.

“எனக்கும் என் நண்பர் கந்தன் சொல்வது சரியான வழி என தோன்றுகிறது. எப்படியும் சமையல் தொழிலை விட  வருமானத்தில் மேம்பட்டதாக இருக்கும். சரி என்று சொல்லி விடட்டுமா என சற்று உரக்க சொன்னார்."

"நீங்க சொன்னா எங்களுக்கும் சரிதான்," என சன்னமான குரல் உள்ளிருந்து வந்தது.

“ரொம்ப   மகிழ்ச்சி. இன்றிரவே மகனிடம் பேசி,  நாளைக்கு தகவல் கூறுகிறேன். அதற்குள் நல்ல நாளாக பார்த்து அன்று வந்து சேரட்டும்.  இந்த கவரில்  கொஞ்சம் பணம் இருக்கு.  செல்லப்பாவிற்கு இரண்டு புத்தாடைகள் வாங்கிக் கொடுங்கள்.  கடையில் நிறைய சைக்கிள் இருக்கிறது.  ஒன்றை அவனுக்கு கொடுக்க சொல்லுகிறேன்..  நான் கிளம்பட்டுமா? “ என்றார்.

"நான் கொஞ்ச நாட்களில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்.  நீங்க அவனுக்கு ஒரு வழி காட்டி, உங்க மகனின் பொறுப்பில் விடுவதே மிகப்பெரிய அன்பளிப்பு, என்றவாறே அவரை கட்டி கொண்டார்.

 "சுந்தரம்,  நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை. எப்போதும் தயக்கம்.  எதையும் வாங்கி கொள்ள மாட்டே".

நல்ல வேளையாக  செல்லப்பா விஷயத்தில்  விட்டு கொடுத்தே,". என்றார் சிரித்தவாரே.

" கந்தா,  எனக்கு ஒரு ஆசை. நம்மிருவர் முன்னிலையே செல்லப்பா ஒரு உறுதி அளிக்கட்டும்.  உன் வாக்கு பலனால் அவன் சொந்தமாக பின்னர் கடை வைக்கும் வேளையில், அதற்கு  “கந்தன் எலக்டிரிகல் ஸ்டோர்ஸ்' என பெயரிட வேண்டும்” என்றார் உணர்ச்சி வசப்பட்டு 

"கட்டாயம் அப்பா," என்று இருவர்   காலில விழுந்து வணங்கி ஆசி பெற்றான்