Wednesday, October 19, 2022

நிம்மியின் நன்றி கடன்





ஒன்பது மணிக்கே கிளம்பியும் நிர்மலாவிற்கு  எதிர்பாராத இந்த போக்குவரத்து தடையினால் ஆபீஸ் போய் சேர ரொம்ப தாமதம் ஆகும் போல தோன்றுகிறது... ஒரே ஹார்ன் சத்தம். காதை பிளக்கிறது.மற்ற நாட்கள் என்றால்  இவ்வளவு   எரிச்சல் படமாட்டாள்.  சி காரில் தனக்கு பிடித்த ஸ்ரேயா கோசாலினதோ அல்லது பிருந்தா மாணிக்கவாசகத்தின்   பாட்டையோ   நிம்மதியாக ரசித்து கொண்டிருப்பாள். இன்று பத்தரை  மணிக்கு . நேர்முக தேர்வு..மூத்த அதிகாரியான அவள் தலைமையில்   தான் நடைபெறவுள்ளது.மணி ஒன்பதே முக்காலை தாண்டிவிட்டது.

நீண்ட ஹாலை வேகமாக கடக்கும் போது  வழியில் ஒரு முதியவர் நிற்பதை  பார்த்து சற்று   நின்றாள்..வயது எழுபதுக்கு  மேல் இருக்கும்.ரேகை படிந்த முகத்தில் மழிக்கப்படாத ஐந்து நாட்கள் தாடி.பண வசதி இல்லாதவர் போல் தென்பட்டார்.பழக்கமான முகம் போல் தெரிகிறதே   என்று ஒரு நொடிதான் யோசித்தாள்.படக்கென்று நினைவுக்கு வர,"நீங்க பழனி தானே? “என்றாள்

அவர் கைகளை தூக்கி கும்பிடும் போது வலது கையில் பழனி  என்று பச்சை   குத்த பட்டு இருந்ததை   பார்த்தாள். அவள் மனம் இருபது வருடங்களுக்கு மேல் பின்னோக்கி சென்றது.அவர் இன்னும் யோசனையில் இருந்தார்."என்னை ஞாபகம் உள்ளதா? சாமியார்   மடம் பஸ் ஸ்டாப்பில்    18  வயதிலிருந்து   நிம்மியை நான்கு வருடங்கள் வருடங்கள்   உங்கள் பஸ்ஸில் காலேஜ்க்கு அழைத்து செல்வீர்களேநினைவுக்கு வருதா?" என்றாள் சிரித்த வண்ணம்.

 அவர் முகத்தில் சற்று வெளிச்சம்.." தினமும் லேட்டடாக வரும் பெண்தானே?நிம்மியோ ,ஜிம்மியோன்னு பேரு,"என்றார்....

ஆமாம் அவளேதான் நிம்மி.. தினமும் இல்லை.பாதி நாட்கள் தாமதமாக வரும் எனக்காக 10 நிமிடங்கள் கூட காத்து கொண்டு இருப்பீங்க  .,ஒரு நாளும் முகத்தை சுளிக்க மாட்டீங்க.பாப்பா சீக்கிரம் வரணும் மத்தவங்களை காக்க வைக்க கூடாது என்று மெள்ள சொல்லுவீங்க  ஆமாம் இங்கே எங்கே? ." என்றாள்

என்னோட பேரனுக்கு இங்க தேர்வாம். அங்க தூரத்தில ஒல்லியா நீல சொக்காய் போட்டுண்டு இருக்கானே அவன்தான் என்னோட பேரன்.  நிம்மிஇங்க வேலை பண்றியா?    .உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா உதவி பண்ணுங்க," என்றார்.

"சரி, ரொம்ப   வருடங்களுக்கு பிறகு உங்களை பார்த்து பேசியதில் சந்தோசம். எனக்கு நாழி ஆகிறது," எனக் கூறி வேகமாக தன் அறைக்கு சென்றாள்.  குளிர்ந்த அறையில் நுழைந்ததுமே தன்  உதவியாளரை கூப்பிட்டு,"  15 நிமிடங்களுக்கு பிறகு தேர்வு குழு அதிகாரிகளை வரச்சொல்லு.அப்புறம் தேர்வுக்கு வந்தவர்களை அனுப்பலாம்," என்றாள்

கண்களை மூடிய பிறகு பழைய எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்தது..கால்களில் மூட்டு வலியோடு அவஸ்தை பட்டுக் கொண்டே  அம்மா மதிய உணவை வேகமாக செய்து முடித்து டப்பாவில்   வைப்பதற்குள் பஸ்ஸின் ஹாரன் தூரத்தில் ஒலிக்கும். அவசர அவசரமாக நிம்மி ஒரு கையில் புத்தகப் பையும் மற்றொன்றில் டப்பாவும்  தெருவில் ஓடுவாள்.100 கஜங்கள் தான்.ஆயினும் வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸுக்குள் ஏறுவது   நித்தியம் நடக்கும் சமாச்சாரம் தான்.ஆனாலும், "மெள்ள வா பாப்பா,விழுந்துட போரே ,"என கரிசனம் காட்டும் பழனி   ஒரு நாள் கூட முகத்தில் எரிச்சலை காட்டியதில்லை. தன்னை ஒரு நாள் கூட ஏற்றிக்  கொள்ளாமல்  சென்றதுவும்  இல்லை.

அறைக்கு உள்ளே   குழுவினர் நுழைய ஆரம்பித்தவுடன் தன்னை சுதாரித்து கொண்டு மலர்ந்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள்..விண்ணப்பதாரிகள் ஒருவர் ஒருவராக கிட்டத்தட்ட 30 நபர்கள்  பரிசீலிக்கப்பட்டு சென்று விட்டனர்.மணி  இரண்டு   ஆகிவிட்டது மதிய உணவுக்கு செல்ல வேண்டிய நேரம். நிர்மலாவின் உதவியாளர் "இன்னும் இரண்டு நபர்கள் தான் பாக்கி," என்றார்..அவர்களையும் அனுப்ப சொன்னாள்.

மனதில் மாணிக்கத்தின் பெயரும் நீல சொக்காயும் ஞாபகம் இருந்தது.அடுத்த நபரும் வேறு யாரோ.பழனியின் முகம் ஒரு நொடி கண் முன்னே தோன்றியது. மனதில் ஒரு சின்ன சஞ்சலம் அந்த தருணத்தில் நீல சொக்காயுடன் மாணிக்கம் கடைசி நபராக உள்ளே நுழைந்தான்..அவன் விண்ணப்பத்தை கவனமாக பார்த்தாள். .கேட்க பட்ட தகுதிகள் இருந்தது.ஓகோவென சொல்ல கூடிய அளவிற்கு இல்லாமல் இருந்தும் மற்றவர்களுக்கு சோடை போகவில்லை.மற்ற குழுவினர் ஒன்றும் கேட்கவில்லை.

மாணிக்கம், இன்னும் ரெண்டு மூன்று நாட்களில் தகவல் வரும்.," என சின்ன புன்முறுவலுடன் சொன்னாள்

வெளியில் பழனி ஒரு எதிர்பார்ப்போடு  ஓரமாக நின்று கொண்டு இருக்கையில்  மாணிக்கம் ' தாத்தா ,நேர்முக  பரிக்ஷை முடிந்தது,"என கூறினான்..

"வேற ஏதாச்சும் சொன்னாங்களா?  நான் அந்த பெண்ணை பார்த்து கேட்கிறேன்.. இங்கேயே இரு,"என்று பழனி சொன்னதும்,," தாத்தா  ,அங்க எல்லாம் போக கூடாது..இன்னும் மூன்று நாட்களில் தகவல் வரும் என்று சொன்னாங்க . எனக்கு கிடைக்கும்னு தோணுகிறது, வாங்க போகலாம்," எனக் கூறினான்.

மாடி படிகளில் இறங்கும்போது,"பழனி,பழனி" என குரல் கேட்டு திரும்புகையில் நிர்மலாவே வேகமாக வந்து," மாணிக்கத்துக்கு வேலை கொடுப்பதாக முடிவு பண்ணிட்டாங்க.இன்னும் மூன்றே நாட்களில் தகவல் வரும்.கவலையே வேண்டாம், ஜாக்கிரதையாக  போயிட்டு வாங்க," என்றாள்..  

"ஏதோ தினம் பஸ்ஸில போய்   இட்டாந்ததை     பெரிசா  நினைச்சுகிட்டு  உதவி பண்றீங்களே நீங்க நன்னா இருக்கணும்.ரொம்ப நன்றி அம்மா,: என்று விடை பெற்றார் பழனி. 

"தாத்தா, இங்க வந்து பேசின அம்மா தான் பெரிய அதிகாரி.. அவங்க தலைமையில் தான் தேர்வே நடந்தது,” என்றான் மாணிக்கம்.  


Wednesday, September 28, 2022

அமலாவின் ஆறுதல்

அமலா தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள்.லேசாக தலை வலி. ஏசி ஓடிக் கொண்டிருந்தாலும் சற்று புழுக்கம்.செல்லதுரை பக்கத்தில் ஆழ்ந்த  தூக்கத்தில் இருந்தான். சத்தம்   போடாமல் எழுந்து மேஜையின் மேல் டோலோ     இருக்கிறதா என்று இருட்டில் துழாவி .பார்த்தாள்.ஓரத்தில் இருந்த ஒரு புத்தகம் கீழே விழுந்தது.

சப்தத்தை கேட்டு செல்லதுரை கண் விழித்து, "அமலா, நள்ளிரவில் தூங்காமல் என்ன தேடிக்கொண்டிருக்கே? " என்று கேட்டான்.

"சாரி, இருட்டில புத்தகம் தவறி விழுந்து விட்டது. சற்று தலை வலி..மாத்திரை தேடி .கொண்டிருந்தேன். நீங்க தூங்குங்க,".என்றாள்.

"நானும் பார்த்து கொண்டுதான் இருக்கேன். நீ முக்கால் வாசி நாட்கள் இரவில் சரியாக  தூங்குவதே இல்லை.காரணம் எனக்கு தெரியும்.இழப்பு நம்மிருவருக்கும் தானே? நிர்மலா  இறந்து இரண்டு வருடங்கள் மேலாகிவிட்டது. அதையே நினைத்து கொண்டு தூங்காமல் இருந்தால் அவள் திரும்பி வர போகிறாளா? உன் உடம்பு தான் கெடும்..இந்தா,இந்த மாத்திரையை சாப்பிடு. தூக்க மாத்திரை இல்லை. மனதை சாந்தப்படுத்தும்.இங்கே வந்து படு." ஒரு கையால் அவளை அணைத்து கொண்டு,மற்றொரு   கையால் தலையை லேசாக பிடித்து விட்டான் அவளும் அவனருகில் இறுக்கமாக நகர்ந்தாள்.சிலநிமிடங்க ளிலேயே அவளும் அந்த இதத்தில்    தூங்கி விட்டாள்.

மறு நாள் அவள் வகுப்பில் நுழைந்தவுடன் முதல் பென்ச்சிலே   ஒரு புதிய  பெண்  உட்கார்ந்து இருப்பதை கண்டாள். யூனிபார்மில் இல்லாமல் நீல வர்ணத்தில் டெனிம்   குட்டை பாவாடையுடன் நீல புள்ளிகள் உள்ள வெள்ளை சட்டையுடன் காணப்பட்டாள். பன்னிரண்டு வயதிருக்கலாம். கண்கள் ஓரம் சிரிப்பும்   பார்க்க மிகவும் அழகாகவும் தென்பட்டாள்.

"புதிதாக சேர்ந்து இருக்கிறாயா? உன் பெயர் என்ன?"  என்று வினாவினாள்.வகுப்பில் ஒரு சிறிய சலசலப்பு.

"ஆமாம் டீச்சர், என் பெயர் நிர்மலா,"

தன்னோட பெண்ணின் பெயரை கேட்டவுடன் அமலாவுக்கு  ஒரு நொடி   தூக்கி வாரி போட்டது.

" திரும்ப சொல்லு உன் பெயரை," என்றாள். வகுப்பில் உள்ள எல்லா சிறுமிகளும்  தலைகளை தூக்கி  டீச்சரை ஆச்சரியத்துடன் பார்த்தன.

"நிர்மலா”, என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

வகுப்பை ஆரம்பித்த பிறகும் அவள் மனம் அந்த சிறுமியை சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி ஒரே  கண்ணால் அவளை பார்த்து கொண்டேயும் இருந்தாள்.சொல்ல முடியாத ஏதோ  ஒரு இன்பமான  உணர்வில் தன மனம் லேசாகி  விட்டது போல் உணர்ந்தாள்..

வகுப்பு முடிந்ததும் சிறுமிகள் எல்லோரும் தங்கள் நோட் புக்குகளை  அவள் மேசையின் மேல் வைத்து விட்டு சென்றார்கள்.

வீட்டுக்கு வந்த பின்னரும் அவள் மனம் அந்த புது சிறுமியை பற்றியும் தன் இறந்து போன  பெண் நிர்மலாவை பற்றியும் சூழ்ந்து கொண்டிருந்தது. என்ன ஒற்றுமை இருவருக்கும் பல விதங்களில்  என நினைத்து ஆச்சரிய பட்டாள். பெயர் மட்டும் இல்லாமல், ஒரே வயது, உடல் கட்டு.கண்கள் ஓரத்தில்   தவழ்ந்த புன்சிரிப்பு, தாழ்ந்த குரலில் பேச்சு   என நினைக்கையில் உடலெல்லாம் புல்லரித்தது  பட்டென எழுந்து சென்று கொண்டு வந்திருந்த நோட்டு புக்குகளை  எடுத்து வந்தாள். ஒரே ஒரு  நோட் புக்குக்கு   அட்டை இல்லை...அதன் மேல் அழகான எழுத்தில் கொட்டையாக நிர்மலா என எழுதி இருந்தது. அப்போதுதான் தன்  மேசை அருகில் அவள் வந்தது ஞாபகம் வந்தது,

 பக்கங்களை புரட்டுகையில் முதல் பக்கத்தில் ஏதோ எழுதி இருந்தது. ஹோம் ஒர்க்காக இருக்க முடியாதே, என்ன எழுதி இருப்பாள் என ஒரு ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.

"அன்புள்ள   அம்மா,

நான் எப்போதும்  உங்களைச் சுற்றியே இருக்கும் காக்கும் தேவதை(guardian angel) என்னை    பார்க்கா  விட்டால் மனம் வருந்த வேண்டாம் .நான் உங்கள் அருகிலேயே உங்களை பார்த்துக் கொண்டே இருப்பேன்  என்கிற  எண்ணத்தோடு   மனத்தென்புடன் இருங்க.

நிர்மலா

ஒரே பரவசமாகி திகைத்து போய் மயிர் கூச்சலுடன் நிற்கையில்  வாசல் மணி அடித்தது..

அமலாவை  பார்த்தவுடனேயே," என்ன ஆச்சு , ஏதோ காணாத காட்சியை கண்ட மாதிரி இருக்கே?"  என கேட்டான் செல்லதுரை.

"இதை பாருங்க,நீங்களே திகைத்துப் போய் விடுவீங்க.  .ஒரு புது சிறுமி இன்று வகுப்பில் சேர்ந்தாள். .நம்ம நிர்மலாவை போலவே  ஒத்த வயது,நடை உடை, பாவனை,..பெயரும் ஒன்றே,    . சிரித்த களையான முகம். .எனக்கு இன்று பூராவும் சந்தோஷம் தாங்கலை. அவள் முதல் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறா பாருங்க,"என கூறி நோட் புக்கை கையில் கொடுத்தாள்..

முதல் பக்கத்தை பார்த்து கொண்டே,  " ஒன்றுமே எழுதலையே.காலியாக இருக்கே.நீயே பாரு,"என திருப்பி கொடுத்தான்

"என்ன உளறீங்க? கண்ணு போயிடுத்தா என்ன? இதோ பாருங்க ,கொட்டை கொட்டையாக எழுதி இருக்கா, பாருங்க

நோட் புக்கை பிடுங்கி மறுபடியும்  பார்த்தான். அமலாவை உற்று பார்த்தவாறே," வெத்து பக்கம் தான்.நீ உடனே ட்ரெஸ்ஸை மாத்திக்கோ .டாக்டரை பார்க்க போகலாம்,' என்றான்   சற்று கலவரத்துடன்.உனக்கு கட்டாயம்  .மனதை அமைதியாக்க மருந்து வேண்டும்.நான் முகத்தை அலம்பி கொண்டு ட்ரெஸ்ஸை மாற்றி கொண்டு வருகிறேன்.சீக்கிரமாக   கிளம்பனும்," என்று உள்ளே சென்றான்.

கணவன்  உள்ளே    சென்ற  பிறகு  மறுபடியும் மறுபடியும்  பார்த்தாள்..அதே மணி மணியான கையெழுத்து.. தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தாள் .திடீரென அவள் முதுகில் மெலிய விரல்களினால் தடவும் உணர்ச்சி ஏற்பட்டது.உடல் முழுவதும் ஒரு புளகாங்கிதம்.   திரும்பி பார்த்தால் யாரும்  காணவில்லை.குமுறிக் கொண்டு மறுபடியும் அழுகை வந்தது. தோள்களை பிஞ்சு கையால் தட்டும் உணர்ச்சி. அருகில்   சற்று சூடான மூச்சு காற்று. அவள் சொன்னபடியே தன் மகள் நிர்மலா தன் பக்கத்திலேயே தேவதையாக உள்ளாள்  என உணர்ந்தாள்.

செல்லதுரை வந்தவுடன் ,'இப்படியே இருந்தால் நாளை டாக்டரிடம் போகலாம், இப்போ சற்று தேவலை போல இருக்கு.. காபி போடட்டுமா? பாவம்,உங்களை தொந்தரவு பண்ணுகிறேன்,"என் ஆறுதலாக கூறினாள்..

மறு நாள் ஆவலுடன் ஸ்கூலுக்கு சற்று முன்னே சென்றாள்.முதல் வகுப்பு தொடங்கியதும் சுற்றி முற்றி பார்த்தாள்.அந்த புதிய சிறுமி   காணவில்லை..ஏமாற்றத்தோடு வகுப்பை பார்த்து .  "நேற்றைக்கு வந்த  அந்த புதிய சிறுமி வரவில்லையா?' என கேட்டாள்.

 எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே  ஒரே குரலில் "புதிய  சிறுமி யாரும் நேற்று வரவில்லையே" என கூறினார்கள்.அவர்கள் தன்னை ஏதோ ஒரு விதமாக பார்ப்பது போல் தோன்றியது.

வகுப்பு முடிந்தவுடன் நேரே ஆபீஸ் ரூமுக்கு சென்று ,"நேற்று வந்த புது சிறுமி நிர்மலா  இன்று வரவில்லை..ஏன் என்று ஏதேனும்  தகவல் உண்டா?" என கேட்டாள்.

"அமலா மேடம், நேற்றோ அல்லது சமீப காலத்தில் யாரும் புதிய மாணவி    சேரவில்லையே. என்ன சொல்லுகிறீர்கள் என புரியவில்லையே," என்றாள் ஒரு  குமாஸ்தா.  .மறுபடியும் மனக் குமுறலோடு அழுகை வரும் தருணத்தில்,முதுகை யாரோ தடவி கொடுப்பது புரிந்தது,"எப்போதும் கூடவே இருப்பேன்"  என்று சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே இருக்கும் இந்த ஆறுதலே போறும்  என்று சுதாரித்து கொண்டு வெளியே வந்தாள்.

தன் கைப்பையில் ஒரு சின்ன டைரியில் இருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் புன்னகைத்தாள். மனதில் இனம் புரியா அமைதி தவழ்ந்தது. இனிப் பள்ளியில் தன் மாணவிகள் எல்லோரும் தன் மகள்தான்  என்று தோன்ற,புதிய ஆசிரியத் தாயாகி,புதிய தென்புடன் கிளம்பினாள்.

 

 








Sunday, September 25, 2022

தோல்வியிலும் புதிய பாதை

எனக்கு என்ன  செய்வது  என்றே  தெரியலை..  யாரிடமாவது  சொல்லி அழணும்   போல இருக்கு.   பத்தாவது வகுப்பில்  பெயிலாகி விட்டேன்.. மற்ற  பையன்கள் பெண்கள் எல்லோரும்  சிரித்து கொண்டும்   தோள் மேல்  கை போட்டு கொண்டு சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் என் அருகில்  வரவில்லை.. புனிதா  மட்டும் என்னை  ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு இருந்தது   எனக்கு தெரிந்தது.  அவள் முகத்தில் சிரிப்பு இல்லை.  சற்று இறுக்கம் போல தெரிந்தது. ஆனால் அவள் வகுப்பில் எப்போதும் முதல் மூன்று இடத்திற்குள் இருப்பாள். அதனால் இந்த முக வாட்டம் என்னை பற்றி தான் இருக்கணும். மற்ற பெண்கள் அவளருகில்   வந்தவுடன் அவள் கவனம் திசை மாறி விட்டது.  முக்கால்வாசிப் பேர் வீட்டுக்கு போய் விட்டார்கள்.

தற்போது என் கவலை எல்லாம், நல்ல எதிர்பார்ப்போடு    காத்துக்  கொண்டிருக்கும்,  அம்மா அப்பாவிடம்  எப்படி சொல்வது என்று தான். இந்த தேர்வு   முடிவை கேட்டால் கட்டாயம் இடிந்து போய் விடுவார்களேன்னு  ஒரு தயக்கம்.  என்னை நம்பித்தான் எங்க குடும்பத்தோட முன்னேற்றத்தை இருவரும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்பாவுக்கு கொஞ்ச நாளாகவே நெஞ்சு வலி..  வெளியில் சொல்வதில்லை,  யாரும் பார்க்காத  போது  நெஞ்சை நீவி விட்டு கொண்டிருப்பது எனக்கு தெரியும். கல்யாண சமையல் தொழில். எப்பொழுதும் சிரமமான வேலை.  அவர் வீட்டில் இருப்பது ரொம்ப குறைவு.  அம்மா இருப்பதை வைத்துக் கொண்டு ரொம்ப சிக்கனமா சமாளித்து  கொண்டிருந்தாள். பள்ளிக்கூட சம்பளம்  செலுத்துவதே கடினமான காரியம்.

என்னோட தங்கை கிரிஜா ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பில் ரொம்ப சுட்டி.. எல்லாவற்றிலும் அவள்தான் வகுப்பில் முதல்.. எப்போது   படிக்கிறாள்னு தெரியாது. அம்மாவுக்கு நிறைய உதவி பண்ணி கொண்டிருப்பாள். வாயை திறந்து எதையும் அம்மாவிடம் வேண்டுமென்று கேட்டு பார்த்ததில்லை.

கோவில் பக்கத்தில் அக்ரஹாரத்தில் ஒரு சேதமான ஒட்டு வீடு.   எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய  அபாயம் உண்டு. தரை எல்லாம் பேர்ந்து இருக்கும். சாணியில் மெழுகி காப்பாற்றிக்     கொண்டு வருகிறோம். வீடு கோயிலை   சேர்ந்ததா அல்லது  வேறு யாருக்கு சொந்தமா என்று கூட  தெரியாது. யாரும் வாடகை கொடுப்பதில்லை. கார்ப்பரேஷன் லாரி தண்ணி தான்.. கிரிஜா எப்போதும்  தண்ணி வாளியுடனோ   அல்லது       ஊசியும் கிழிந்த பாவாடையை தைத்து கொண்டோ  இருப்பது தான்  என் கண் முன் நிற்கிறது

ஒரு ஓரத்தில் இந்த கவலைகளோடு மூழ்கி  இருக்கையில் முற்றிலும்  எதிர்பாராதவிதமாக என்னோட ஆசிரியர்  கந்தசாமி  சார்   நான் தனியாக  இருப்பதை பார்த்து என்னருகில் வந்தார்..  சற்று வயதானவர்,என் அப்பா சுந்தரம் அவரின்  பால்ய   நண்பர். . என்னிடம் வாஞ்சையாக இருப்பார்,  என் முதுகை தடவி கொடுத்து கொண்டே சொல்லலானார்.  என் முகத்தைப் பார்த்தே தேர்வு  முடிவு அவருக்கு தெரிந்திருக்கும்..

“செல்லப்பா, எதற்கும் கவலைப் படாதே. எல்லோருக்கும் எல்லாம் கை கூடுவது  இல்லை. ஒவ்வொருவருக்கும்  சில திறமையும்  சில தோல்வியும் இருக்கும் .. உனக்கும்  கணக்குக்கும் சரிப்பட்டு வரலை.. டியூஷன் வைப்பது உன் அப்பா சம்பாத்தியத்தில் நினைச்சு கூட பார்க்க  முடியாது.  நானோ  தமிழ் ஆசிரியர்.  என்னால் உனக்கு சொல்லி தரவும் இயலாத நிலை .   அனாவசியமா இன்னொரு வருடம்  படித்து நேரத்தை விரயமாக்குவதில்  பிரயோஜனமில்லை.  புத்தக படிப்பு தான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி என்று  சொல்ல முடியாது. அநேகம் பேர் ஏனைய தொழில்களில்  நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.  இன்று இரவு எட்டு மணி அளவில் நேரில் வந்து பார்க்கிறேன் என்று    அப்பாவிடம் சொல்லு,"என்றார்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மா என் முகத்தை உற்று பார்த்தவுடன் ஒரு நொடியில்  ஒன்றும் பேசாமல் தன்னை சுதாரித்துக்   கொண்டு, “நாழி ஆகிறது, சாப்பிட வா," என்றாள்.

அங்கே வந்த அப்பாவிடம், “குழந்தை சாப்பிடட்டும்.அப்புறம் பேசலாம்,"என்றாள்

"ரொம்ப பசியாமோ?" என நக்கலுடன்  கேட்டு விட்டு நகர்ந்தார்.

சாப்பிடுகையில் சன்னமாக , “அப்பா எது பேசினாலும் பதில் சொல்லாதே.. பொறுமையுடன் கேட்டுக் கொள்," என்றாள்.

"அப்பாக்கு தெரியுமா? யார்  சொன்னாங்க? " என கேட்டேன்.

மெலிதாக சிரித்துக் கொண்டே,"உன்னோட முகம் தான்" என்றாள்

அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தார்.

"கந்தசாமி சார், என் தமிழ் ஆசிரியர் இரவு  எட்டு  மணிக்கு வருவதாக சொல்லச் சொன்னார்," என தாழ்ந்த குரலில் சொன்னேன்.

“எதுக்கு? துக்கம் விசாரிக்கவா?அவர் வந்து உன்னோட தலை எழுத்தை மாற்ற   முடியுமா?. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கே,  ஸ்கூலுக்கு தலை முழுகிப்  போட்டுவிட்டு   நீயும்   என்னை மாதிரி கையில் கரண்டியுடன் சமையல் வேலைக்கு நாளைலேர்ந்து வா. அதுக்கு தான் லாயக்கு. இப்போ சற்று என்னை தனியாக விடு," என்று கூறி விட்டு முகத்தை திருப்பி கொண்டு விட்டார். கிரிஜா என் கையை பற்றி ஆதரவாக வெளியில் அழைத்து சென்றாள்.

சொன்னபடியே கந்தசாமி சார் வந்தார்.  “செல்லப்பா, நீ வெளியே இரு," என்று அப்பா எரிச்சலுடன் கூறினார்.

"சுந்தரம், நாம பேச போவது அவனை பற்றிதான்,அவனும் கூட இருக்கட்டும்,"என்றார் கந்தசாமி

"உன்னோட ஆதங்கம் தெரியும் .இருந்தும் நீ நான் சொல்வதை பொறுமையாக பதட்டப் படாமல் கேட்கணும், சரியா?" என்று ஆரம்பித்தார். என்னை பார்த்து “என்னருகில் உட்கார்," என்றார்..

“உன் மகன் மக்கு இல்லை. இதை நன்றாக புரிந்து கொள். தமிழில் அவன் வகுப்பில் முதல் ஐந்து   இடங்களில் இருக்கிறான்.. தமிழில் ஆர்வம் இருக்கிறது. கணக்குதான் வருவதில்லை. அதனால் தோல்வி அடைகிறான்.

சாதாரணமாக புத்தக படிப்பு இருந்தால் வாழ்க்கையில்  முன்னேறுவது சுலபம். ஆனால் நிறைய மக்களுக்கு படிப்பு   எளிதில் அமைவதில்லை.. காரணங்கள் பல உண்டு. பண வசதி இல்லாமை , குடும்ப சூழ்நிலை, சிறு வயதிலேயே வேலைக்கு போகும் நிர்பந்தம், சொந்த திறன் குறைவு  என்று  சொல்லிக் கொண்டே போகலாம். ஏற்கனவே உன் பையனிடம்   சொன்ன மாதிரி . எல்லோருக்கும் எல்லாம் கை கூடுவது  இல்லை. ஒவ்வொருவருக்கும்  சில திறமையும்  சில குறைகளும் இருக்கும்.

அநேகம் பேர் ஏனைய தொழில்களில்  நிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். நான் அரசியல்வாதிகளை பற்றி சொல்லவில்லை. என்னுடைய மகனே எட்டாம் வகுப்போ என்னவோ விட்டுவிட்டு இன்று பல கடைகள் வைத்து நிறைய வருமானம்   மிக்க வசதியாக இருக்கிறான்.  அப்பா வேலையை விடு என்று வற்புறுத்துகிறான். நான் தான் இதை வேலையாக பார்க்கவில்லை.  ஒரு கடமையாக செய்கிறேன் என்று சமாதானப் படுத்துவேன். ஆகையால் மறுபடியும் படிக்க சொல்லி காலத்தையும்,பணத்தையும் விரயமாக்குவதில்  அர்த்தமில்லை,.  சரிதானே” என்றார்.

"கந்தா,  நீ என்ன சொல்ல வருகிறாய்  ?' என்றார் சுந்தரம்

“என் மகன் எலக்ட்ரிக் துறையில் பல கடைகள் வைத்து இருக்கிறான். கொள்ளை வருமானம்.  நிறைய ஆட்கள் அவன் கீழ் வேலை செய்கிறார்கள். ஆறு மாதத்தில் செல்லப்பாவை தொழிலில் அனுபவ பூர்வமாக தேர்ச்சி அடைய செய்ய முடியும்.  பிறகு அவன் ஒரு கடையை தனியே பார்த்து கொள்ள என் மகன் பொறுப்பை கொடுப்பான். சில வருடங்கள் பிறகு  செல்லப்பாவே தன் தொழிலை நல்ல இடத்தை தேர்ந்து எடுத்து தனியாக செய்யட்டும்.”

முதல் ஆறு மாதம் கொஞ்சம் பணம் தருவான். அப்புறம் அவன்  கடையின் வருமானத்தை   பொறுத்து  அவன்   சம்பளம் நிர்ணயிக்கப் படும்.  நாம் இருவரும் சம்பாதிப்பதை விட பல மடங்கு வருமானம் கட்டாயம் இருக்கும். தற்போது எங்கும் வீட்டு கட்டுமானம், நிறைய காலனிகள் வந்து கொண்டே இருக்கிறது. நல்ல மார்க்கெட் . .

சொந்த கடை துவங்கிய பிறகு  அவன் உழைப்பு, சாமர்த்தியம், கடவுள் அருள்  பொறுத்தவை. இப்போது பதினாறு வயது, இருபத்தைந்தில் நல்ல வசதியாக இருப்பான்.  என்ன  சொல்றே?" என்றார்.

"செல்லப்பா,  உனக்கு என்ன தோன்றுகிறது?  தைரியமாக சொல்லு." என்றார் சுந்தரம்

"அப்பா, நீங்க என்ன  முடிவு பண்ணுகிறீர்களோ, அதுவே என் முடிவு," என பணிவுடன்  சொன்னேன்.

“எனக்கும் என் நண்பர் கந்தன் சொல்வது சரியான வழி என தோன்றுகிறது. எப்படியும் சமையல் தொழிலை விட  வருமானத்தில் மேம்பட்டதாக இருக்கும். சரி என்று சொல்லி விடட்டுமா என சற்று உரக்க சொன்னார்."

"நீங்க சொன்னா எங்களுக்கும் சரிதான்," என சன்னமான குரல் உள்ளிருந்து வந்தது.

“ரொம்ப   மகிழ்ச்சி. இன்றிரவே மகனிடம் பேசி,  நாளைக்கு தகவல் கூறுகிறேன். அதற்குள் நல்ல நாளாக பார்த்து அன்று வந்து சேரட்டும்.  இந்த கவரில்  கொஞ்சம் பணம் இருக்கு.  செல்லப்பாவிற்கு இரண்டு புத்தாடைகள் வாங்கிக் கொடுங்கள்.  கடையில் நிறைய சைக்கிள் இருக்கிறது.  ஒன்றை அவனுக்கு கொடுக்க சொல்லுகிறேன்..  நான் கிளம்பட்டுமா? “ என்றார்.

"நான் கொஞ்ச நாட்களில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்.  நீங்க அவனுக்கு ஒரு வழி காட்டி, உங்க மகனின் பொறுப்பில் விடுவதே மிகப்பெரிய அன்பளிப்பு, என்றவாறே அவரை கட்டி கொண்டார்.

 "சுந்தரம்,  நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை. எப்போதும் தயக்கம்.  எதையும் வாங்கி கொள்ள மாட்டே".

நல்ல வேளையாக  செல்லப்பா விஷயத்தில்  விட்டு கொடுத்தே,". என்றார் சிரித்தவாரே.

" கந்தா,  எனக்கு ஒரு ஆசை. நம்மிருவர் முன்னிலையே செல்லப்பா ஒரு உறுதி அளிக்கட்டும்.  உன் வாக்கு பலனால் அவன் சொந்தமாக பின்னர் கடை வைக்கும் வேளையில், அதற்கு  “கந்தன் எலக்டிரிகல் ஸ்டோர்ஸ்' என பெயரிட வேண்டும்” என்றார் உணர்ச்சி வசப்பட்டு 

"கட்டாயம் அப்பா," என்று இருவர்   காலில விழுந்து வணங்கி ஆசி பெற்றான் 

Sunday, May 24, 2020

ஊர் வம்பு

பதினைந்து தளங்கள் கொண்ட பெரிய அடுக்கு மாடி கட்டடம். சுமார்   நூறு அபார்ட்மெண்ட்கள் இருக்கலாம். நாலாவது மாடியில்  ரேணுவும் மங்களாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தார்கள்।.இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு,அவர்கள் குழந்தைகளும்  ஒரே பள்ளிக்கூடம். ரொம்ப அன்யோன்யம்.
"மங்களா, இந்த கோவிட் வந்தாலும் வந்தது நம்ம அஸோஸியேஷன் கமிட்டீ பண்ணுகிற அட்டகாசம் தாங்கலை.இத்தனை நாள் வரை காய்கறிகாரன் பத்து மணிக்குள்ள ஒழுங்கா வந்து எல்லோருக்கும் கொடுத்து விட்டு போய்விடுவான். இன்னிக்கு வரலையேன்னு விசாரிச்சா காம்பௌண்ட்க்குள்ல வரக்கூடாதுன்னு ஆர்டராம். முன்னாடியே சொல்லக்கூடாதோ. தட்டி கேட்க ஆள் கிடையாது," என்று ரேணு அங்கலாய்த்தாள்.
"இவர் தொடை நடுங்கி! எல்லா ஆணவமும் என்னிடம் தான்,வெளியில் வெறும் பூனைதான்,அடிச்சி சொல்ல பயம்।"என்று சிரித்தாள்.
"அது போகட்டும். உனக்கு இந்த விஷயம் தெரியுமோ, மங்களா? உன்னிடம் சொல்லாம மண்டை வெடிச்சிடும் போல இருந்தது," என ரேணு கிசுகிசுத்தாள்.
"அது என்ன சுவாரஸ்யமான விஷயம்? யாரை பற்றி அந்த மேனாமினுக்கி யா?"மங்களா கேட்டாள்.
“பாவம் அவள் இல்லை. தினமும் வேறு வேறு அழகான உடைகளில் பார்ப்போமே,அந்த வாணி சொல்லிக்காத கொள்ளிக்காத  ஓடிவிட்டாளாம். "என்னை தேட வேண்டாம்" னு ஒரு குறிப்பு எழுதி வெச்சுட்டு   போய் விட்டாளாம்.ஒரு வயது குழந்தை வேறு.பாவம்,அவள் புருஷன் அதை கைல வெச்சுண்டு   அலையறதை பார்த்தா மனசை  பிழிஞ்சி எடுத்து விட்டது,” என  மூக்கை சிந்தினாள் ரேணு .
" அது எப்படி? பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி தானே இருந்தாள் கல்யாணம் ஆகி ரெண்டு மூன்று வருஷம் தான் இருக்கும். அவள் கணவனும் அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு   நல்லவனா தானே இருந்தான்.ஏன் இப்படி? ஏதோ தப்பாக சொல்றேன்னு தோன்றுகிறது,"மங்களா சந்தேகத்துடன் சொன்னாள்.
"யார் கண்டா எந்த புற்றுல எந்த பாம்பு இருக்கும் என்று? ஒரு வேளை அவள் விருப்பத்திற்கு மாறாக அவள் அப்பா அம்மா  இவன் தலைல கட்டி இருக்கலாம். அதுதான் பிடிக்காம பழைய காதலனோடு ஓடிவிட்டாள். "
"அது சரியில்லையே. கல்யாணம்னு ஆன பிறகு காதலனை துண்டித்து   இருக்க வேண்டாமோ? நீ என்ன நினைக்கறே, ரேணு?" என மங்களா வினவினாள்.
"நான் என்ன நினைக்கறதுக்கு, அக்கம் பக்கத்தில் பேசிக்கறது அந்த ஆள் அடிக்கடி அவளை சந்திப்பானாம். கர்மம்!,நாடு குட்டி சுவ்ரா போயிண்டு இருக்கு,"என்று ரேணு புலம்பினாள்.
"கிட்ட வா நான் ஓண்ணு சொல்லட்டுமா? அவள் காதலனை நானும் பார்த்து இருக்கிறேன்.அழகுன்னா கொள்ளை அழகு, என்ன உடல் வாகு, என்ன கம்பீரம்!அவள் புருஷனோ கட்டை குட்டையா பார்க்கவே கோரமா இருப்பான்.அவள் நிலையில்  இருந்தால்  நானே ஓடி இருப்பேன்,"என மங்களா கிசுகிசுத்தாள்.
ரேணு சிரித்தவாறே சொன்னாள்,"இன்னொரு விஷயம் தெரியுமா உனக்கு? அந்த வாணி ஆறு மாதம் கர்ப்பமாம்".
"அட பாவமே, எனக்கு தெரியவே தெரியாதே. சரி சரி கார் ஹார்ன் சப்தம் கேட்கிறது. என்னோட புருஷன் வரார்.காபி போட போகணும். அப்புறம்   வாணிக்கு என்ன ஆச்சுன்னு   முழுவதும் தெரியணும்.ஒன்னையும்  விடாமல் சொல்லு. இந்த ரெண்டு நாட்களாக டிவி சீரியல் பார்க்கவே முடியலை. இவர் டிவி ரிமோட்டை தன கையில் வெச்ச்சுண்டு கோவிட் நியூஸையே பார்த்துண்டு இருக்கார்.வீட்டில ஒரே ஒரு டிவி। அரை மணியில்   வந்துடறேன்। " என்று சொல்லி கொண்டே நகர்ந்தாள்।

Wednesday, May 6, 2020

பெருமாளின் சிபாரிசு


சாயந்திரம் கடியாரம் நாலு மணி  காண்பிச்சவுடனேயே அம்புஜம் பாட்டிக்கு  இருப்பு கொள்ளாது..வயது எழுபதுக்கு மேல்   இருக்கலாம் .டாண்ணு காலை இழுத்துண்டு கோவிலுக்கு கிளம்பி விடுவாள். ஒடிசலான ஆனால் உயரமான  உடல் வாகு. இதில்  எப்படி ஒன்பது கஜ புடவையை கட்டிக்கறானு ஆச்சரியம். தலையை வாரிண்டு  பளிச்சுனு நெத்தியில் ஒரு ஸ்ரீசூர்ண கீறலுடன் ஒரு கம்பீரம்..  பார்த்தசாரதி கோவில் பக்கத்தில தான் சாத்தானி தெருவில் வீடு.பொடி நடையில் ஐசிங்கர் (அழகிய சிங்கர்) சந்நிதி வழியா கோவிலுக்கு வந்துடலாம்...
பெருமாள் சன்னிதிக்கு  வெளில உள்ள மண்டபத்தில் ஒரு ஓரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்துண்டு  விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் சில தடவை முகுந்தமாலையையும் படிப்பாள். ஒரு நாள் கூட தவறாது. நடு நடுவிலே பெருமாளை பார்த்துண்டு ஏதோ வாய் முணுமுணுத்துண்டு இருக்கும்.சிலசமயம் கன்னத்தில் பட்டு பட்டுனு போட்டுப்பாள். யாரிடமும் அநாவசியமாக பேசமாட்டாள்..கும்பல் இல்லாம இருந்தால்  சன்னிதிக்குள்ள    போய் பெருமாளை தரிசனம் பண்ணுவாள். தீர்த்தம் சடாரி வாங்கிப்பாள்..தினம் வருவதால் அர்ச்சர்களுடன் நல்ல  பரிச்சயம். அதில் ஒருவர் சிங்கம் ஐயங்கார். பிரதான அர்ச்சகர் இல்லை. ஆனால் சாயந்திர வேளைல   கட்டாயம் பார்க்கலாம். வயது 65  இருக்கலாம். அவருக்கு இந்த வயதான பாட்டி மேவ ஒரு கரிசனம். முக்கியமான தினங்களில் ஏதாவது பிரசாதம் சக்கரை பொங்கல்,புளியோதரை,தோசை வடைனு ஏதாவது பொட்டலத்தில் கட்டி கொடுப்பார்.
"உங்க சொந்த விஷயத்தில் தலை இடுவதாக   நினைக்க வேண்டாம். தினம் மனமுருகி .பக்தியோட பெருமாள் கிட்ட ஏதோ வேண்டிக்கொள்வது தெரிகிறது. இன்னமும் அவர் செவி சாய்க்கலை போலும் தோணுகிறது.என்னால் ஏதாவது  உபகாரம் பண்ண முடியும்னு  தோணினால்   தயக்கமில்லாமல் சொல்லுங்கோ.".என ஒரு நாள் பரிவுடன் கேட்டார்.
:உங்க கிட்ட சொல்ல என்ன தயக்கம். வாழ்க்கையில் ரொம்ப கஷ்டபட்டுட்டேன். பணத்துக்கு   கஷ்டமில்லை. ஒரே பெண் இருந்தாள். பார்த்து பார்த்து நல்ல இடம்னு ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.. அவா  நல்ல குடும்பம்தான். அவன் பெரிய போக்கிரி தறுதலைனு பின்னாடி தான் தெரிந்தது. எல்லா கெட்ட பழக்கமும் உண்டு..வாயில் பொய்யை   தவிர வேற வராது. இது போறாதுன்னு.கொடூர புத்தி வேற..என் பெண்ணோ அவனுக்கு நேர் எதிர் , சாந்த சுபாவத்தோட,நல்ல பண்புகள்,கெட்டிக்காரி. அதிர்ந்து பேச மாட்டாள்.இதனால் அவனுக்கு இன்னமும் கோபம் வந்து கண்மூடித்தனமாக அடித்து   துன்புறுத்துவான்.அவள் உண்டாகி எட்டு மாதம் இருக்கையில்,  அவன்   .கேட்ட பணம் தன்   வசமில்லை என்று சொன்னதால் கோபத்தில்   இடுப்பில் உதைத்தான்..எசகு பிசகா அடிபட்டு குழந்தை பிறந்து அவள் ஒரே வாரத்தில் போய் சேர்ந்து விட்டாள்.
பெண் குழந்தையை நாங்க   எடுத்துண்டு வந்துட்டோம்.குழந்தையை கொடுக்கறதுக்கு பணம் வேணும்னு அடம்  பிடிச்ச்சான்..என்னோட மருமான் போலீஸ்ல வேலை. அவனை கூட்டு மிரட்டினதில பெட்டி பாம்பாய் அடங்கிட்டான்.என்னோட பேத்தின்னு பெருமையாக பீத்திகலை   
. ரொம்ப அழகி..அவள் அம்மா   மாதிரியே சூட்டிகை  குணம் பழக்க வழக்கம் எல்லாம் இருக்கு .பெரிய படிப்பு படிச்சு    நல்ல வேலைல இருக்காள்.இந்த வைகாசில.வயது 26 .முடிய போறது அவளை நல்ல படிச்ச குணவான்  ஒருத்தனிடம் கொடுத்துட்டா நிம்மதியா பிராணனை விடுவேன்.ஒண்ணும்  அமையலை .அதுதான் தினம் இங்கே வேண்டிக்கறேன்," என்றாள்
"கோத்திரம் என்ன? என்ன படிச்ச்சாள், எங்க வேலை.?ஏதாவது காதுல பட்டா சொல்கிறேன்,"என்றார்.. .
"எனக்கு விவரமா தெரியாது. கேன்சர் மாதிரி வியாதிக்கெல்லாம் ஆராய்ச்சி பண்ணி மருந்து கண்டு பிடிக்கற வேலையாம்.படிச்சிண்டே இருப்பாள். கை நிறைய சம்பளம்."
பலே பலே!. அசாத்திய கெட்டிகாரி தான். என்ன உசரம் இருப்பாள்?"
"அவ அம்மா மாதிரி நல்ல உசரம்...நீங்க ஒரு உதவி பண்ணனும் கட்டாயமாக. பண்ணுவேளா?," அம்புஜம் பாட்டி கேட்டாள். கூடவே "நானும் வருஷ கணக்கா ஆத்மார்த்த பக்தியோட  வேண்டாத நாள் இல்லை. என் மேல் என்ன குறையோ தெரியலை . பெருமாள் கண்ணை திறக்கலை."என அங்கலாய்த்தாள்
"எது எப்போது நடக்கணும்னு பெருமாளுக்கு தெரியாததா?.வேளை வரும் போது கட்டாயம் செவி சாய்ப்பார். கவலைப்பட வேண்டாம்,"ஆறுதலாக சொன்னார்.
. "எனக்கு ஒண்ணு தோணறது. நீங்க 365 நாட்களும் எம்பெருமான் எதிரிலேயே நின்று கொண்டு அவருக்கு கைங்கரியம் பண்ணிண்டு இருக்கேளே.முழு நேரமும் நாக்கிலே அவர் நாமம்தான், தரிசனமோ எப்போதும் அவரோட திவ்ய ரூபத்தை தான். நீங்க எனக்காக ஒருதடவை அவர் காதில் போட்டா நிச்சயமாக நடக்கும்னு என்னோட தீவிர அபிப்பிராயம். தயவு செய்து பண்ண முடியுமா?." என கெஞ்சாத குறையாக வளைந்தாள்..
சிங்கம் அய்யங்கார் குலுங்க குலுங்க சிரித்தவாறு  சொன்னார்," நான் பணத்துக்காக இங்க வேலை பண்ணலை.என்னோட பசங்க "போதும் அப்பா கோவில்ல வேலை பண்ணினது.வீட்டோடு இருங்க ," என்று வற்புறுத்துகிறா..எனக்கு தான் பெருமாளை விட மனசில்லை.அவரை பாக்காம இருக்கவே முடியாது.ஆனால்  என்னோட பக்தி அவருக்கு தெரியுமோ தெரியாதோ.? ஏதோ சம்பளத்திற்காக வேலை பாக்கறான்னு நினைக்கலாம்."
" இப்படி சொல்லி தட்டி கழிக்காதீங்கோ. நீங்க தனியா அவரோடு இருக்கையில்   அந்த கிழவியோட பேத்திக்கு உடனே கல்யாணம் நல்ல இடத்தில் ஆகனுன்னு அடிச்சி சொல்லுங்கோ.அவர் கட்டாயம் உங்க வார்த்தைக்கு காது கொடுப்பார்.அவர் எடுத்துண்ட காரியம் எப்போதுமே ஜெயம் தான். உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு இந்த ஒத்தாசை ஒன்றே   போறும் " என்றாள்..
சிங்கம் ஐயங்காருக்கு பச்சாதாபம் கலந்த  குழப்பம் மேலிட்டது .இந்த  கிழவிக்கு சாதாரண அர்ச்சகரின்  பக்தியின் மேல்  என்ன தீவிர நம்பிக்கை.   பகவான் பக்கத்திலேயே இருப்பதால்   அவருக்கு தன்னிடம்  நெருக்கம் இருக்கும் என்கிற  கிழவியின் பேதைமை..இருந்தாலும் தட்ட முடியாமல், " கவலை வேண்டாம், கட்டாயம் அவரிடம் விண்ணப்பம் பண்ணுகிறேன். .எனக்காக இல்லா விட்டாலும் உங்கள் நம்பிக்கைக்காகவாவது முடித்து கொடுப்பார்.,"என்றார்
அவருக்கு இரவு முழுக்க தூக்கம்  இல்லை. பெருமாளிடம்     சிபாரிசு பண்ண நான் என்ன அந்த பாட்டிக்கு பெரிய குருவா? என்ன அதிகப்ரசங்கித்தனம் என்கிற எண்ணம் மனதில் ஓடியது.
பாட்டியின் நிலையும் சங்கடத்தை உண்டு பண்ணியது..மறு  நாள் பிரதான அர்ச்சகர் வராததால் இவர் அதி காலையிலேயே போகும்படியாகி விட்டது. வழக்கத்தை விட மிக ச்ரத்தையாக 
அவசரப்படாமல் பூஜையை முடித்தார்..  

சன்னிதியில் யாருமில்லை.  . ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் ,” எம்பெருமானே  ,நான் எனக்காக விண்ணப்பிக்கலை.அந்த வயதான அம்மாள் இரண்டு வருஷமாக  தினம் மனமுருகி உங்கள் சந்நிதிலே  ப்ரார்த்தனை பண்ணுகிறாள். உங்களுக்கு தெரியாதது  இல்லை. எனக்கு உங்களிடம்  அதிக ஸ்வாதீனம். உண்டு என நினைத்து கொண்டு உங்கள்  காதில் போட சொன்னாள். உங்கள் காருண்யம் அளவிட முடியாதது. கூட்ட மாத்திரத்திலேயே யானைக்கென்ன, திரௌபதிக்கு  என்ன என்று  ஓடி வரவில்லையா?நாராயண சப்தம்  கேட்டாலே சுகம் உண்டாகும்னு  உங்க பெருமை பிரசித்தமாச்சே..அந்த கிழவி பக்கம் உங்கள் பார்வையை திருப்ப மாட்டேளா,” என அழாதக் குறையாய் யாசித்தார்..

பெருமாளிடமிருந்து ஒரு சலனமும் இல்லை। இவரை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல அய்யங்காருக்கு பட்டது।  அப்படியே  சாஷ்டாங்கமாக கீழே விழுந்து தன்னை மன்னிக்கும் படியாக வேண்டி கொண்டார்।அவர் எழுந்த போது ஒரு புஷ்பம்  பெருமாளின் கையிலிருந்து விழுந்தது। அய்யங்காருக்கு  உடலெல்லாம் புல்லரிப்புடன் கூடிய புளகாங்கிதம்। பாட்டியிடம் இந்த நல்ல சூசகத்தை சொன்னால் சந்தோஷப படுவாள் என நினைத்து கொண்டார். ஆனால் அன்று மாலை அவர் கோவிலுக்கு வரவில்லை।

அன்று இரவு நல்ல தூக்கத்திற்கு இடையே திடீரென்று சந்தனம் பூவின் வாசனையோடு மணி அடிக்கும் சப்தம்  போல கேட்டது।ஸ்வப்னமா அல்லது நிஜமா என்று தெரியாத ஒரு நிலை। எதிரே மீசையுடன் கூடிய பெருமாளேதான் சிரித்த வண்ணம் அவரை பார்த்து கொண்டு இருந்தார் தூக்கி வாரி போட்டு அய்யங்கார் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தார் ।।

கணீரென்ற குரலில் ,"என்ன சிங்கம் ஐயங்காரே கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்க்கு அலைகிறீரே। என்னையும் யானையை காப்பாத்தின மாதிரி உடனே வரணும்னு வேற கட்டளை இடுகிறீர்களே ।  நீங்க முடிக்கவேண்டிய சிறிய விஷயம் அல்லவா?"; நகைத்தவண்ணம் கேட்டார்।

"பரந்தாமா, என் சிறிய புத்திக்கு   எட்டவில்லையே";

"ஆற அமர யோஜியும்।நல்லபடியா முடியும்। " என கூறி அடுத்த க்ஷணமே மறைந்தார். 
 ஐயங்காருக்கு கனவா நினைவா என தெரியாமல் வேர்த்து கொட்டியது। உடனேயே புரிந்து கொள்ள இயலாத தனது மந்த புத்தியை கடிந்து கொண்டு படுத்த வண்ணம் யோஜித்து கொண்டு இருக்கையில் எங்கோ மணி  12 அடித்தது।

மறு நாள் பாட்டி அவரிடம்,” "நேற்றைக்கு உங்களை பார்க்க முடியலை. உடல் நலம்தானே என்றாள்।

" எல்லாம் சரியாக இருக்கு। பெருமாள் காதில் நேற்றே போட்டு வைத்தேன்। உடனேயே ஒரு வரன் கிடைச்சது. அதை பற்றி உங்களுடன் பேசணும்னு நீங்க வருவதை எதிர் பார்த்துண்டு இருந்தேன்।
நான் சொன்னேனா இல்லையா?நீங்க கேட்ட அடுத்த க்ஷணமே பெருமாள் கண்ணை திறந்து விட்டார்।எவ்வளவு பெரிய பாக்கியம் உங்களுக்கு। வரன் யாராம்? என்ன பண்ணுகிறான்?
பையனுக்கு   28  வயது।உசந்த படிப்பு வெளியூர் பேங்க்ல  நல்ல வேலை।கிட்ட தட்ட மாதம் ரெண்டு லக்ஷம்   வருமானம்।வசதியான வீட்டுல பெங்களூர்ல ஜாகை।।
இந்த போட்டோ பின்னாடி எல்லா விவரமும் இருக்கு।பேத்தியிடம் காண்பிங்கோ।।அவளுக்கு பிடித்தால் அவள் படத்துடன் எல்லா தகவலும் கொடுக்க சொல்லுங்க।நான் அவனிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்றார்।
ஒரு  தடவை  சூடு  பட்டுண்டேன்। ।ரொம்ப முக்கியமான விஷயம் அந்த பையனும் அவனோட  மனுஷாளும் நல்லவாளாக இருக்கணும்।பணம் முக்கியமில்லை। பணம் முக்கியமில்லை।  குணம் தான் பிரதானம்।இந்த விஷயத்தை தீர விசாரியுங்கோ  என்றாள்।
ஏற்கனவேயே சொல்லி இருக்கேளே।।முதலில் பேத்திக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்கோ।நான் தேரடி தெருவில அஹோபில மடத்துக்கு   அடுத்த வீட்டுலதான்   இருக்கேன்।பேத்தியையும் அழைத்துக் கொண்டு நாளை காலம்பற எட்டு மணிக்கு வாங்கோ।ஞாயிற்று கிழமை தானே।விவரமா பேசி முடிச்சிடலாம்
மறு நாள் பேத்தியுடன்  காரில் வந்தார்கள்।பாட்டிக்கு வீட்டை பார்த்தவுடன் ஒரு பிரமிப்பு।ஏதோ ஏழை அர்ச்சகர் வீடு போல இல்லாமல் வசதிகளுடன் அழகாக இருந்தது।க்ரானைட் தரையுடன் உயர்ந்த சோபா செட்டோட சுவத்தில பெரிய டிவி  ஏர் கண்டிஷனர்।  ஐயங்காரின் மனைவியும்  சரளமாக வரவேற்றாள்।
" பேத்தி எதிர்பார்த்ததைவிட அழகாக இருக்காளே।வேதவல்லி தாயாரோட பேர் வேதா। ரொம்ப சந்தோஷம்।அவளுக்கு பையனை பிடித்து இருக்கணும்னு நினைக்கிறேன்,” என்றார் அய்யங்கார்
ஐயங்காரின் மனைவி எல்லோருக்கும்  காபியுடன் வேதா பக்கத்தில் உட்கார்ந்தாள்।
அவா  குடும்பத்தை பற்றி  நன்னா விசாரிக்க முடிந்ததா?   அவா எங்கே இருக்கா??” பாட்டி கேட்டாள்
இங்கே திருவல்லிகேணிலதான் இருக்கா।சரி ஒண்ணு சொல்லுங்கோ।நீங்க என்னை பற்றி என்ன நினைக்கறேள்? அய்யங்கார் கேட்டார்।
பரம உத்தமமான புருஷர்।பிரபந்தம் எல்லாம் அத்துப்படி எப்போதும் பகவத் சிந்தனையே தான்।பெருமாளுக்கு ரொம்ப பிடித்தமானவர்,ரொம்ப உபகாரி।வேற என்ன சொல்வது? நான் பையனோட   குடும்பத்தை பற்றி   கேட்டால்   என்னிடம் எதுக்காக இந்த கேள்வி?
அய்யங்கார் இதை கேட்டவுடனே குலுங்க குலுங்க சிரித்தார்। கிழவிக்கும் வேதாவுக்கும் புரியாமல் அவரின் மனைவியை பார்த்தார்கள்.
ஒண்ணு சொல்ல விரும்புகிறேன்।முதலில் இந்த பையனை பற்றி எண்ணமே இல்லை। பெருமாளிடம் உங்க பிரார்த்தனையை சொன்னபோது புஷ்பம் அவர் கையிலிருந்து விழுந்தது।இது நல்ல சகுனம் தான் என நினைத்துக்கொண்டேன்।।இரவு ஸ்வப்னத்தில் அவர் வந்து  வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைகிறீர்களே என்ற பிறகும் புரியலை। நன்றாக யோஜியும் என கூறி மறைந்தவுடன் தான் தோன்றியது।பெருமாள் சித்தம் அப்படி இருந்தால் இனிதே நடக்கட்டும்என உங்களிடம் போட்டோ விவரங்களை கொடுத்தேன்।அப்பொழுதும் உங்களிடம் இவன் யார் என கூறவில்லை,” என்றார் அய்யங்கார்।
உடனேயே அவரின் மனைவி,”,இந்த வரன் வேங்கடகிருஷ்ணன் வேற யாருமில்லை எங்க பையன் தான்।அவனிடம் வேதா போட்டோவை காண்பித்து பேசினோம் ।அவனுக்கு ரொம்ப திருப்தி।நான் எப்போது பெண்ணை பார்க்க  வரணும்னு கேட்டுண்டு இருக்கான். நீங்கதான்   மேற்கொண்டு  சொல்லணும்,” என்று சொல்லி சிரித்தாள்
பாட்டியும் வேதாவும் அவர்களோடு சிரிக்கலாயினர்। 


Monday, May 15, 2017

ரசனையும் கருணையும்


 சின்ன ஊர்தான் ஆனால் அங்குள்ள ராமர் கோவிலோ பிரசித்தம். முக்கியமாக அங்கு உள்ள ஆஞ்சனேயர் ஒரு வரப் ப்ராஸாதி. கோவிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய குளம். கோவில் வாசலுக்கு ஒட்டின மாதிரி இரு பக்கங்களிலும் வீடுகளுடன் பிரதான தெரு. காலையிலும் மாலையிலும் கோவில் நிறைந்து இருக்கும். கதைக்கு வருவோம். இந்த சம்பவம் 60 வருஷங்களுக்கு முன் நடந்தது.
லக்ஷ்மி காலையில் சுமார் எட்டு மணி அளவில் சமையல் அறையில் உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருப்பாள். இருந்தாலும் ஹார்மோனியத்திலிருந்து தூரத்திலிருந்து வரும் மெல்லிய சங்கீதத்தை கேட்டவுடனேயே வாசலுக்கு ஒரு டம்ளரில் அரிசியுடன் விரைந்தோடி வருவாள். அப்பொழுதுதான், அந்த பெரியவர் அவள் வீட்டிற்கு வரும் வரை அவரின் சன்னமான இனிமையான குரலில் ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டே பாடும் தியாகராஜ கீர்த்தனைகளை, அவளால் கொஞ்ச நேரமாவது கேட்க முடியும்.
அறுபது வயதுக்குள் இருக்கலாம், ஒல்லியான உடல் வாகு, நல்ல உயரம், தீர்க்கமான நாசி, நெற்றியில் கோபி சந்தனம், சாந்தமான முகம், கழுத்தில் துளசி மாலை, உஞ்சவிருத்தி பிராம்மணராக இருந்தாலும் அவரிடம் மரியாதையை வரவழைக்கும் கம்பீரமான தோற்றம் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி, தலயை சுற்றி மஞ்சள் துணியால் தலைப்பாகை, அதே ராம நாம எழுத்து பதிந்த துணி அவர் முதுகை மறைத்து முழங்கால் வரை பின்னே தொங்கியது. ஒரு தோளிலும் கழுத்திலும் தொங்கிய ஹார்மோனியமும், மற்றொரு தோளில் பளபளவென்று ஒரு பித்தளை செம்பு தொங்கியது.
அவர் தன்னையே மறந்தவராக கண்களை சற்று மூடியவாறு தியாகபிரம்மத்தின் கீர்த்தனைகளை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டே நடப்பார். யார் வீட்டு வாசலிலும் சில க்ஷணங்ககளுக்கு மேல் நிற்கமாட்டார். அவர் வாசலில் வருவதற்கு முன்னரே சில பெண்மணிகள் அரிசியோடு காத்து கொண்டிருப்பார்கள். அரிசியை செம்பில் சேர்த்துவிட்டு சிலர், முக்கியமாக லக்ஷ்மி, காலில் வீழ்ந்து வணங்குவதும் உண்டு. அவர்களை ஆசீர்வதித்து விட்டு கொஞ்சம் அரிசியை பெண்மணிகளின் பாத்திரத்தில் போடுவார்.
லக்ஷ்மியை அவரின் ராம பக்தியும், இசைத்திறமயும், பரந்த மனோதர்மமும் வசீகரித்தது. ஒரு நாள் பாடின பாட்டுகளையே மறு நாள் பாடமாட்டார். ஹார்மோனியம் வாசிக்கும் திறமையால் பாட்டு மேன்மை அடைகிறதோ அல்லது அவரின் குரல் வளமுடன் பக்தி உத்வேகமும் சேர்த்து அவரின் கானத்திற்கு ஒரு தெய்வீக அனுபவத்தை கொடுக்கிறதோ எதுவென்று லக்ஷ்மிக்கு தெரியவில்லை. ஆனால் அந்த பத்து நிமிஷ ஆத்மானுபாவத்திற்காக தினம் ஆவலுடன் காத்திருப்பாள். அவர் ஒரு நாள் வராவிட்டால் என்னவோ எதோ என்று கவலையுடன் வாசலில் அடிக்கடி எட்டிப் பார்ப்பாள்.
லக்ஷ்மி சிறு பெண்ணாக இருக்கும்போது அவளுக்கு வாய்பாட்டு ஏழெட்டு வருஷங்கள் சொல்லி கொடுத்திருகிறார்கள். கீர்த்தனைகள் முடித்து ஆலாபனை ஆரம்பிக்கும் வரை கற்று கொண்டிருக்கிறாள். அவள் அப்பா அவளுக்கு ஒரு ஹார்மோனியம் வாங்கி கொடுத்து இருக்கிறார். கல்யாணத்திற்கு பிறகு பாடுவது குறைந்து நாளாவட்டத்தில் நின்றே விட்டது. ஹார்மோனியத்தை பூஜா அறையில் வைத்து விட்டாள்.
அந்த பெரியவருக்கு இவளின் சங்கீத ரசனையை பார்த்து இவளுக்கு தேர்ச்சி இருக்கிறது என அனுமானித்து இவள் வீட்டு வாசலில் சில நாட்கள் சற்றே அதிக நேரம் நின்று பாட்டை வித விதமான நிரவல்களுடனும் ஸ்வரங்களுடனும் பாடுவார். அதில் அவளுக்கு பரம சந்தோஷம்.
திடீரென்று மூன்று நாட்கள் அந்த பெரியவர் உஞ்சவ்ருத்திக்கு வரவில்லை. லக்ஷ்மிக்கு என்னவோ ஏதோ என்று கவலை. யாரிடமும் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை ஜுரமாக இருக்கலாமோ, அரிசி இல்லாமல் சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவார் என்று மனக்குடைச்சல். அவள் கணவர் வெங்கடேசனிடம் மெள்ள அவள் கவலையை சொன்னாள்.
வெங்கடேசன் சிரித்துக்கொண்டே” உனக்கு யாருக்காக எதற்காக கவலைப் படுவது என ஒரு விவஸ்தை இல்லை. “உதர நிமித்தம் பஹு க்ருத வேஷம்னு” நீ கேள்வி பட்டு இருக்கையா? ஜாண் வயிற்றுகாக பல வேஷம் போடறது. அந்த ஆள் வெள்ளை வேஷ்டி உடுத்திண்டு, நெத்தியில சந்தனத்தோட பாடிண்டு வருகிற கௌரவ பிச்சைக்காரர். ராமர் பேரில் பெண்களுக்கு பிடித்த பாட்டுகளைப் பாடி சுலபமாக அரிசியை வாங்கிண்டு போற ஆள்,” என்றான். லக்ஷ்மிக்கு கோபம் பொத்திகொண்டு வந்தாலும் மௌனமாக வெளியே சென்றுவிட்டாள்.
எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிகொள்வதைத் தவிர அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிருஷ்டவசமோ அல்லது வேண்டுதலில் பலனோ அடுத்த நாளே அந்த பெரியவரின் பாட்டு சப்தம் கேட்டது. வேகமாக வாசலில் வந்த அவளுக்கு ஒரு அதிர்ச்சி. முகவாட்டத்துடனும் பலஹீனமாகவும் கழுத்திலிருந்து தொங்கும் ஹார்மோனியமும் இல்லாது அவர் காணப்பட்டார்.
“மாமா. என்ன ஆச்சு? உடம்பு சுகமில்லையா? மூன்று நாட்களாக காணவில்லையே. ஹார்மோனியம் எங்கே?” மிக்க கவலையுடன் கேட்டாள்.”
“ஓரு சின்ன விபத்து ஏற்பட்டு விட்டது. ஒரு ஆட்டோக்காரன் என் மேல் மோதி கீழே தள்ளிவிட்டான். அதுகூட பரவாயில்லை. என் ஹார்மோனியத்தின் மேல் ஏற்றி அதை தவிடு பொடியாக்கிவிட்டான். கையில கால்களில் பலத்த அடி. இப்பொழுது வலி பரவாயில்லை. ஹார்மோனியம்இல்லாமல்கிரஹலக்ஷ்மிகளை ஈர்க்க உரக்க பாட வேண்டி இருக்கிறது. எல்லாம் ராமன் செயல். கொஞ்சம் கஷ்டப்படனும்னு விதி. வேறு என்ன சொல்றது?” என்றார்.
“தயவு செய்து இரண்டு நிமிஷங்கள் இருக்க முடியுமா? இதோ வந்து விட்டேன்,” என்றபடியே பூஜா அறைக்கு விரைந்தாள். அங்கு கண்களை மூடியபடி அவளின் ஹார்மோனியத்தை அவருக்கு தானமாக கொடுக்க அனுமதி கோரினாள். சேவித்த பிறகு சிகப்பு வெல்வெட் துணியால் மூடிய ஹார்மோனியத்தை கைகளில் கொணர்ந்து அவரின் கைகளில் கொடுத்தாள். திகைப்புடனும் ஆச்சரியத்துடனும் ஹார்மோனியத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தவண்ணம் நாத்தழுக்க “என்ன இது?” என வினவினார்.
ஹார்மோனியத்தின் மேல் மூடிய சிகப்பு துணியை எடுத்தவாறே “இது நான் சிறுமியாக இருந்த போது என் அப்பா வாங்கிக்கொடுத்தது. கல்யாணத்திற்க்கு பிறகு பாடுவதை நிறுத்தி விட்டேன். இது பூஜா அறையில் இருந்தது. உங்களிடம் இருந்தால் நன்றாக உபயோகப்படும். தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுகொள்ளுங்கள்,” என்றாள்.
அவர் தயக்கத்துடன் நிற்பதை கண்டு “சற்றும் யோசிக்க வேண்டாம். நான் உங்கள் பெண் மாதிரி. சற்று சுயநலம் கூட உள்ளது. நீங்கள் வாசிக்க நான் கேக்கும் பாக்கியமும் இருக்கு. ஒரே ஒரு ஆசை,” என நிறுத்தினாள்.
என்ன என்கிற கேள்விக்குறியோடு அவளை நோக்கினார்.
“எனக்காக ‘நிதி சால சுகமா, ராமுடு சன்னிதி சேவ சுகமா’ கல்யாணி ராக பாட்டை விஸ்தாரமாக நிரவல் ஸ்வர ப்ரஸ்தாரத்துடன் பாட இயலுமா?” என்றாள்.
“அதற்கென்ன, தாராளமாக பாடுகிறேன்” என்று பூஜா அறையின் முன்னால் அமர்ந்து பாட ஆரம்பித்தார். பக்தி பரவசத்துடன் ரொம்ப பிரசித்தமான அப்பாட்டிற்கு புது மெருகு ஊட்டி கற்பனையோடும் உற்சாகத்துடனும் பாடி லக்ஷ்மியை தெய்வானுபவத்தில் திளைக்க  விட்டார்.
மாலையில் ஹார்மோனியத்தை அவருக்கு கொடுத்த விஷயத்தை லக்ஷ்மி சொன்ன போது, வெங்கடேசன் “நல்ல காரியம் பண்ணினாய். அது  இடத்தை அடைத்து கொண்டிருந்தது,” என்றான்.  
லக்ஷ்மி மறுபடியும் மௌனம் சாதித்தாள்