Sunday, May 7, 2017

முள்ளும் மலரும்

மணி கிட்டதட்ட மூணாகப்போறது. இப்பொழுதான் சாந்திக்கு சற்று ஓய்வு கிடைத்தது. இன்னும் அரை மணியில் குழந்தைகள் ஸ்கூலிலிருந்து வந்து விடுவார்கள். ஒரு க்ஷணம் உட்காரவில்லை. காலை ஆறு மணியிலிருந்து ஒரே ஓட்டம்தான். ப்ரேக்ஃபாஸ்ட். மதிய உணவு, குழந்தைகளை தயார் படுத்துவது, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றுவது, பேங்க் வேலை, டிஷ் வாஷர், வாஷிங் மெசின் என பல வேலைகள் ஒரே சமயத்தில் நெருக்கும். வேலைக்கு ஆள் இருந்தாலும் சில வேலைகளை தானே செய்தால் தான் அவளுக்கு சரிப்படும். கணவன் ராகவனோ எதிலும் பட்டுக்கொள்ளாமல் மொபைலும் கையுமாக இருப்பான். நிறைய தடவை சொல்லிப்பார்த்தும் பலனில்லை. சிடுசிடுத்தாலும் அவன் லக்ஷியப்படுத்தமாட்டான். அதில் அவளுக்கு பெரிய குறை. அடிக்கடி சண்டையும் போடுவாள். குழந்தைகளிடமும் கொஞ்ச மாட்டான்.
ஏ சி யை போட்டு படுக்கையில் சாய்ந்தவண்ணம் கண்களை மூடி கொண்டு சாந்தி சற்று ஓய்வு எடுக்க படுத்தாள். அந்த சமயம் மெலியதாக மென்மையான குரலில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாட்டு அவள் காதில் விழுந்தது. கோடியில் முனியம்மாவின் அறையிலிருந்து தான் வந்தது. சப்தம் போடாமல் அங்கு சென்று கதவின் வெளியிலிருந்து உள்ளே பார்த்தாள். தரையில் பாயின் மேல் படுத்துக்கொண்டு சன்னமான குரலில் முனியம்மா பாடிக்கொண்டிருந்தாள். கிராமீய மணத்துடன் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. முகத்தில் ஒரு சலனமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் தன் பாட்டையே ரசித்து கொண்டிருந்தாள்.
அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்டக் கூடாதோ
பழகும் போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ

என்ன கருத்து செறிந்த பாட்டு. அர்த்தம் புரிந்துதான் பாடுகிறாளோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவள் வாழ்வில் வசந்தம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்திருக்கிறாள். அதை பிறகு பார்ப்போம்.
“முனியம்மா, இவ்வளவு அழகாக பாடுவாய் என்று எனக்கு தெரியவே இல்லையே. குரல் வேறு ரொம்ப இனிமையாக இருக்கு. சிறு வயதில் பாட்டு கற்று கொண்டிருக்கிறாயா??யார் சொல்லிக்கொடுத்தது? கொஞ்சம் பாடி காண்பியேன்” என்றாள் சாந்தி.
சட்டென பாயை சுருட்டி எழுந்து நின்றபடியே லேசான வெட்கத்துடன்,” என் அம்மா நன்னா பாடுவாங்க. அதை கேட்டும், அவங்களோட பாடியும் கொஞ்சம் கத்துண்டேன். அம்பிட்டுதான். ” என்றாள்.
“என்ன மாதிரி பாட்டு தெரியும் உனக்கு?”
” நலங்கு, தாலாட்டு, கும்மி, கோலாட்டம்நு கொஞ்சம் தெரியும். மறந்து போகக்கூடாதுனு இப்படி பாடிண்டு இருப்பேன். சின்ன வயசுலே எங்க ஊரிலே ஏதாவது விசேஷம்னா என்னைத் தான் பாடச் சொல்லி கூப்பிடுவாங்க இப்ப பசங்க ஸ்கூல்லேந்து வந்துடும். இன்னொரு நாள் உனக்கு பாடி காண்பிக்கறேன்,” என்றாள். ஒருமையில்தான் பேசுவாள்.
முனியம்மா வேலைக்கு சேர்ந்துஆறு மாதங்கள் தான் ஆகிறது. அவளுக்கு முன்னே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆள் ஏதாவது ஒரு காரணத்துக்கு அல்லது நொண்டிசாக்குடன் மாறிகொண்டே இருந்தார்கள். இவள் ஸ்திரமாக வேலையையும் செவ்வனே செய்துகொண்டு அனாவசியமாக பேசாமல் குறிப்பறிந்து நடந்து கொண்டாள். சாந்திக்கு பரம திருப்தி. அவளுக்கு கடைசி அறையை கட்டில் படுக்கை ஃபேன் வசதியோடு கொடுத்திருந்தாள். காபி சாப்பாடு பாகுபாடுமில்லாமல் உண்டு. நாள்கிழமை என்று அடிக்கடி துணிமணியும் வாங்கி கொடுப்பாள். இது தவிர மாத சம்பளமும் கொடுப்பாள். முனியம்மாக்கும் சந்தோஷம்தான். இவள் வந்ததிலிருந்து சாந்தியும் தனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிட முடிந்தது.
முனியம்மாவுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கலாம். சற்று ஒல்லியாகவும் உயரமாகவும் களையாக இருப்பாள். சிரித்த முகம். அதிர்ந்து பேசமாட்டாள். எந்த நேரமும் தலையை சீவி சுத்தமாக இருப்பாள். தன்னுடைய கஷ்டங்களை எளிதில் வெளியே சொல்லமாட்டாள். இருந்தும் அவளிடம் விதி படு கொடூரமாக விளையாடி விட்டது.
18 வயதிலேயே திருமணம். அவள் கணவன் மூன்று குழந்தைகளைத்தவிர வேறு சுகத்தையோ காசையோ அன்பையோ கொடுத்ததில்லை. மொடாக்குடியனிடம் கண்டது எல்லாம் அடியும் ஒதையும் தான். விடிவு காலமோ என்னவோ சில வருடங்களிலேயே வயிற்றில் அல்சர் வந்து போய் சேர்ந்தான். இரண்டு பிள்ளைகள் ஒரு பெண். மூத்த மகன் ஸ்கூலில் குழந்தைங்க சவாரி பண்ணுகிற சின்ன வண்டி ஓட்டற வேலை. ஏதோ ஒரு சின்ன பெண் குழந்தையிடம் த்காத முறையில் தப்பாக நடந்ததில் ஜெயிலில் ஏழு வருஷங்கள் இருந்தான். அப்புறம் அவனை பற்றி தகவலே இல்லை. அவளுடைய பெண்ணோ யாரோ இவளைவிட 20 வயது மூத்த ஆட்டோக்காரனுடன் ஓடிவிட்டாள். கடைசியாக கேள்விபட்டது அவளுக்கு அவன் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு மறைந்து விட்டானாம். கொஞ்ச நாட்கள் அல்லோலபட்டுவிட்டு குழந்தையுடன் மும்பாயில் ஈன வாழ்க்கையில் உழண்டு கொண்டிருப்பதாக அரசல் புரசலாக செய்தி. கடைசி மகன் வடக்கே சென்றவன் தான். எங்கே இருக்கானோ என்ன பண்ணுகிறானோ கடவுளுக்குதான் வெளிச்சம். முனியம்மா பல வருஷங்கள் தனியாக கஷ்டப்பட்டு கடைசியாக சாந்தியிடம் வந்து சேர்ந்தாள். இப்பொழுதுதான் அவள் வாழ்க்கை சீராகத் தொடங்கியது.
எப்படி இவளால் எல்லாக் கவலைகளையும் மறந்து இப்படி சந்தோஷமாக பாட முடிகிறது என்று சாந்திக்கு ஒரே ஆச்சரியம். வேறு யாராக இருந்தால் இத்தனை கஷ்டங்களை தாங்க முடியாமல் மனம் ஒடிந்து நிதானத்தையே இழந்திருப்பார்கள். சாந்தி தன்னையே யோசித்து பார்த்தாள். அன்பான வசதியான தாய்தந்தையர், நல்ல படிப்பு, அழகான நல்ல வேலையிலுள்ள கணவன், அருமையான இரு குழந்தைகள், பெரிய வீடு, தனக்கென தனி கார் எல்லாம் இருந்தும் சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கு, குறைகளுக்கு சலிப்பும் கோபமும் அடிக்கடி வருகிறது. ராகவன் அவளை ஏன் இப்படி எப்பொழுதும் சிடுசிடுப்பாய் இருக்கிறாய் என கடிந்து கொள்வான். ஆனால் வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் காணாத இந்த முனியம்மாவால் எப்படி இவ்வளவு விவேகமாய் எல்லாவற்றையும் மறந்து குயிலைப்போல பாட முடிகிறது. சாந்தி அவள் முகத்தையே விந்தையாக பார்த்தவண்ணம் இருந்தாள்.
“ஏன்ன அம்மா அப்படியே உற்று பார்த்துண்டு இருக்கே? ஏதாவது யோசனையா?” என்றாள்
“ஒன்னுமில்லை. நீ அடிக்கடி இப்படி பாடுவாயா?”
பாடுவேனே. மனம் சந்தோஷமாக இருந்தால் பாடுவேன். உன்னோட வீட்டுக்கு வந்ததிலிருந்து எனக்கு ஒரே சந்தோஷம்தான்,”
“அட அப்படி என்ன சந்தோஷம் இங்கே?” என பிரமிப்புடன் கேட்டாள்.
“என் வாழ்க்கையில் பார்த்து அறியாத அன்பை இங்கதான் முதல் தடவையாக பார்க்கிறேன். என்னை உன்னோட வீட்டு மனுஷியாக நடத்தறே. நான் கட்டிலை கண்டேனா ஃபேனை கண்டேனா, சூடான சாப்பாடை பார்த்து இருக்கேனா. ஒரு பொண்ணு அம்மாவை எப்படி ஆசையா பார்த்துக்கோமோ அப்படி பார்த்துக்கறே. பழைய துணியையே கட்டின எனக்கு புதுப்புது சேலையா வாங்கி கொடுக்கறே. என்னை வேலைக்காரியா நடத்தலை. உன்னோட பசங்க இரண்டும் எங்கிட்ட பாசமா இருக்குங்க. உன்னோட புருஷன் உங்கிட்ட அன்பாய். பார்த்து வசதியெல்லாம் பண்ணி கொடுக்கராரு. இந்த மாதிரி அன்பும் பாசமும் இல்லாத என் வாழ்க்கை இத்தனை வருஷங்கள் பாலைவனமாகி போச்சு. இங்க உங்கிட்ட வந்த பிறகுதான் பசுஞ்சோலையாக மாறியது. எனக்கு வேற என்ன தேவை நீயே சொல்லு,” என்றாள்.
கண் கொட்டாமல் அவளையே பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்த சாந்திக்கு சட்டென்று ஞானோதயம் ஏற்பட்டது. அல்ப விஷயங்களுக்கெல்லாம் அலுத்துகொள்கிற தன் சுபாவம் எப்படி வாழ்க்கையை கெடுக்கிறது என புரிந்தது. சந்தோஷம் என்பது சின்ன துன்பங்களிலேயே மனதை உழல விடாமல், கடவுளின் அருளால் கிடைத்த நன்மைகளுக்கு நன்றி செலுத்துவதில் தான் உள்ளது என புரிந்தது.
“சரி, ஒரு பாட்டு எனக்காக பாடேன்,” என்று தரையில் உட்கார்ந்தாள். குழந்தைகளும் கும்மாளத்துடன் குதித்து அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தன. முனியம்மாவும் குதூகலத்துடன் பாட ஆரம்பித்தாள்.
ஆராரோ ஆரிரரோ
ஆராடிச்சா என் கண்ணே
அடிச்சாரைச் சொல்லி அழு
அவராதம் போட்டிருவோம்
மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டாலே
அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே



9 comments:

  1. What Muniamma says is right. Though it is difficult, we should ignore the negative things in life and try to be happy..We can do it with practice.

    Enjoyed reading!

    ReplyDelete
  2. Kalpana VasudevanMay 7, 2017 at 5:56 PM

    As usual Mullum Malarum was very nice. The way you describe the characters is marvellous. The story is just flowing from your pen in such a manner the reader would become a part of the story

    ReplyDelete
  3. Beautiful story ! Appreciating simple things in life

    ReplyDelete
  4. Awesome,brought before my eyes a great visual!

    ReplyDelete
  5. அருமை அருமை
    இழந்துப் பின் பெறுபவர்களுக்கும்
    இல்லாதுப் பின் பெறுபவர்களுக்கும்
    ஒரு முதிர்ச்சி வரும்
    அது தரும் மகிழ்ச்சி அளவிடமுடியானது
    அருமையான படைப்பு
    பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. More often we tend to fail in appreciating others closely associated with us. Whereas an outsider's unbiased observations brings forth the real qualities ,good or bad as it may appear.

    ReplyDelete